நாளை 05.08.2018ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று 03.08.2018ம் திகதி வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பலாஹ் பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள சகோதரர் பஸ்மி அவர்களின் இல்லத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற சிறி முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், போராளிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்ட விஷேட கூட்டமொன்றின் பின்னரே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் திருப்தியற்றதாகக் காணப்படுவதுடன், கல்குடாத்தொகுதியில் கட்சியை வளர்க்கத் தேவையான முன்னெடுப்புகளை அமைப்பாளர் செய்யத்தவறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியே மேற்படி தீர்மானத்திற்கு வர நேர்ந்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
அத்தோடு, அமைப்பாளரினால் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்டோர் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன், இவர்களை ஒன்றிணைத்து பிரதேசத்தில் கட்சியை வளர்ப்பதற்கோ அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கோ தவறி விட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வாழைச்சேனையில் பின்தங்கிக் காணப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் எந்தவித முன்னெடுப்புக்களையும் செய்யத்தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவைகள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைமை அவரசத் தீர்மானத்திற்கு வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாளை கண்டியில் நடைபெறவுள்ள கட்சியின் பேராளர் மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.
அத்தோடு,கால தாமதமின்றி கல்குடாதொகுதிக்கு முழு நேரமாக சிறப்பாகச் செயற்படக்கூடிய புதிய அமைப்பாளரை உடனடியாக நியமனம் செய்து கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விஷேட கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஐ.எல்.பதுர்தீன், எச்.ஏ.அன்வர், எம்.ஐ.ஹாமித் மெளலவி, ஏ.ஜி.அஸீஸுல் றஹீம், கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.இம்தியாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.