- ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட்-
இலங்கையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதை தினமும் ஊடகங்கள் மூலமாக பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்கிறோம்..படிப்பறிவு இல்லாத ஒழுக்கமற்ற சிலர்களால் பயண்படுத்தப்பட்டு வந்த போதை பாவனை இன்று சிறுவர்கள் துவக்கம் பாடசாலை, கல்லூரி மாணவர்கள் நல்லொழுக்கம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள்,படித்தவர்கள், பணக்காரர்கள் என பலரும் போதைக்கு அடிமையாகி சீரழிவதை சமூகத்தில் காணலாம்.
இவ்வாறான போதைப் பழக்க வழக்கங்களினால் கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொள்ளை, கொலை, களவு போன்ற சமூக சட்ட விரோதமான செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.
இது போன்ற சமூக சீரழிவான போதைப் பொருட்களை நமது நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நாட்டிட்குள் கொண்டுவரப்படுகிறது இதற்கு காரணம் தடுக்க வேண்டிய சில அதிகாரிகள் பணத்திற்காக இது போன்ற சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஆகும்.
இந்த போதைப் பொருள் பாவனை சிகரட் ,பீடி போன்ற புகைத்தல் போதையில் இருந்தே ஆரம்பமாகிறது. இது போன்ற பொருட்கள் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதுசாரம் மற்றும் புகையிலைத் தடைச் சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டுள்ளன. இருந்தும் சிகரட் போன்ற போதைப் பொருட்களின் நமது நாடு அதிக வருமானத்தை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கடந்த வருட அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சத வீதத்தினர் புகைத்தல் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பாடசாலை மாணவர்களில் ஆயிரத்தில் ஒருவர் புகையிலை பாவனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால்தான், புகையிலையை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் யாழ். மாவட்டத்தில் புகையிலை உற்பத்தியைக் குறைக்குமாறு அல்லது உற்பத்தியியைக் கைவிட முன்வர வேண்டுமென மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளது.
நமது நாடு நஞ்சு இல்லாத போதைப் பொருள் பாவனை இல்லாத தூய்மையான ஒரு நாடாக மாற்றம் பெற்று எதிர்கால சந்ததியினர் போதை இல்லாத நல்லொழுக்கம் உள்ளவர்களாக உருவாக வேண்டும் என்றால் இந்த நாட்டின் நற் பிரஜைகளான ஒவ்வொருவரும் சிகரட்,பீடி போன்ற புகைத்தல் போதை பாவனைகளுக்கு எதிராக போராட வேண்டும். இவைகளை விற்பனை செய்வதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் இது நம் ஒவ்வொருவரதும் சமூகப் பொருப்பாகும்.
எங்கள் உறவுகள் சிகரட் போன்ற போதைக்கு அடிமையாகி இருந்தால் உரிய முறையில் அதனது தீமைகளை தெளிவு படுத்தி அவர்களையும் நமது நாட்டையும் பாதுகாக்க வேண்டும். அதே போல விற்பனை செய்பவர்கள் கிட்டத்தட்ட கொலை காரர்கள் அவர்களின் குற்றத்தை உணர்த்தி திருத்த வேண்டும் இது எமது மிகப்பெரிய சமூகப் பொருப்பாகும்.
ஆகவே இந்த நாட்டின் ஒவ்வொரு நற் பிரஜைகளும் நாட்டினதும் எதிர்கால சந்ததிகளினதும் வாழ்வில் அக்கரை கொண்ட நல்ல குடிமகனும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகப் போராடி இந்த கொடிய போதைகளை முற்றாக அழித்து ஒழிக்க முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.