பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்படி கூட்டம் நேற்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் நிரூபித்துள்ளார். எனவே, மீண்டுமொருமுறை பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை'' என்று கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 46ஆவது ஷரத்தின் பிரகாரம் பிரதமரை பதவி நீக்குவதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. 46ஆவது ஷரத்தில், ""பிரதமர், ஜனாதிபதிக்கு முகவரியிட்டனுப்பும் தம் கைப்பட எழுதிய கடிதத்தின்மூலம் அவரது பதவியைத் துறந்தாலொழிய அல்லது நாடாளுமன்ற உறுப்பினரொருவராக இல்லாதொழிந்தாலொழிய அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்கீழ் அமைச்சரவை தொடர்ந்தும் பணியாற்றும் காலம் முழுவதும் அவர் பதவியில் இருக்கவேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ள விடயத்தை கோடிட்டுக் காட்டியே உறுப்பினர்கள் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் குறைந்தளவு உறுப்பினர்கள் இருந்தாலும் பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தார். 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதியால் அவ்வாறு செய்யமுடியாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதேவேளை, அமைச்சரவை மாற்றத்தின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி தனக்கு வேண்டாம் என்றும், அதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டார் என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.