எம்.ஜே.எம்.சஜீத்-
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்ட நடவடிக்கைகள் தனிப்பட்டவர்களின் கம்பனிகள் போன்று தொடர்ந்தும் இயங்குமானால் ஜனாதிபதிக்கு இத்தகவலை தெரிவித்துவிட்டு இணைத்தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டியேற்படும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் (5) வெள்ளிக்கிழமை அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜயவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், கோடிஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அம்பாரை மாவட்டத்தில் மூவின மக்களும் இனநல்லுறவைப்பேணி சந்தோஷமாகவும், ஐக்கியமாகவும் வாழ்ந்துவருகின்றனர். இம்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து தனிப்பட்டவர்களின் கம்பனி போன்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமானால் ஜனாதிபதியிடம் விபரங்களைத் தெரிவித்துவிட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் பதவியினை இராஜினமா செய்ய வேண்டிவரும் என உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தினத்தில் ஜூம்ஆ கடமையினை நிறைவேற்றிக்கொள்வதற்காக பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கமாகும். இதனால் வெள்ளிக்கிழமை தினங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்துவதில்லை என ஏற்கனவே தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவசர அவசரமாக வெள்ளிக்கிழமை தினத்தில் திட்டமிட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாகவுள்ளது. இதனை தனிப்பட்ட ஒருவரின் கம்பனி போன்று வழிநடாத்த முடியாது. இது கன்டிக்கத்தக்க விடயமாகும்.
அம்பாரை மாவட்டத்தில் வாழும் மூவின மக்களினதும் பிரச்சினைகளை மாதந்தோரும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்தி தீர்வுகானுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ள போதும் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 2016ஆம் ஆண்டில் ஒரு கூட்டமும், 2017ஆம் ஆண்டில் இரண்டு கூட்டங்களும் நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு அலட்சியமாக கூட்டங்களை நடாத்துவதனால் ஒருபோதும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது.
குறிப்பாக ஒரு வருடத்தில் ஓரிரு கூட்டங்களே நடாத்தப்படுகின்ற வேளையில் அவசர அவசரமாக முஸ்லிம்களின் விஷேட தினமான வெள்ளிக்கிழமையில் கூட்டங்களை நடாத்தி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளையும், அம்பாரை மாவட்ட முஸ்லிம் உயர் அதிகாரிகளையும், வெள்ளிக்கிழமை மார்க்கக்கடமைகளை நிறைவேற்ற முடியாதளவிற்கு நடந்துகொள்வது கன்டிக்கத்தக்க விடயமாகும்.
எனவே 12மணிக்குள் இக்கூட்டத்தினை நிறைவு செய்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும், அரச உயர் அதிகாரிகளும் உரியவேளையில் மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அம்பாரை மாவட்ட செயலகத்தில் பலர் அரசாங்க அதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் அம்பாரை மாவட்டத்திலுள்ள மூவின மக்களின் மனங்களையும் வெள்ளக்கூடிய வகையில் செயற்பட்டுள்ளனர். அதனாலே அவர்கள் இன்று உயர் பதவிகளைப் பெற்று பலரினதும் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.
ஆனால் தற்போதைய அரசாங்க அதிபர் இந்த மாவட்டத்தில் வாழும் மக்களின் மனங்கள் பாதிக்கப்படும் அளவிற்கு தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார். அத்துடன் அரசியல் தலைவர்களையும் முட்டி மோதுவதற்கும் களமமைத்து செயற்படுகிறார். இவ்வாறான செயற்பாடுகள் இந்த மாவட்டத்தில் வாழும் மக்களுடைய இன உறவை சீர்குழைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.மன்சூர் எழுந்து நின்று முஸ்லிம் மக்கள் ஜூம்ஆ கடைமைக்காக பள்ளிவாசல் செல்லும் நேரமாகிறது. எனவே கூட்டத்தினை தயவு செய்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நன்பகல் 12மணியுடன் நிறுத்தப்பட்டு, முஸ்லிம் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தினை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி நடாத்துவதெனவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.