அனா-
வாழைச்சேனை பிரதேச பொது மக்களால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.
இதன்போது தமிழர் தேசத்தை அங்கீகரி, அரசே தமிழர் வாழ்க்கையை சிதைக்காதே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், வடக்கு கிழக்கு எங்கள் தாயகம், வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய் என பல்வேறு வாகசங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் வாக்கில் வந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவித கரிசனையும் காட்டுவதில்லை, அதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் இதில் அக்கறை காட்டுவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களாகிய எங்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இது நல்லாட்சி அரசாங்கம் இல்லை போலி அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பெரிதும் ஏக்கத்துடன் வாழ்ந்து வருவதுடன், பிள்ளைகள் கல்வியை தொடர முடியாமல் தந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்கள், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்குவார்கள், இவர்களின் உறவுகளுக்கு உதவிகளை வழங்குவார்கள் என்று பார்த்தோம் இந்த நல்லாட்சி என்று கூறும் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.
யுத்தத்தின் போது தமிழ் மக்களை கொன்றதும் இல்லாமல் தமிழ் மக்களை கைது செய்து சிறையில் அடைந்து வைத்தனர். எனவே நல்லாட்சி வேடம் பூண்டுள்ள அரசாங்கம் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.