ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு - கல்குடா எதனோல் உற்பத்திச் சாலை விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஷ்வான் உத்தரவிட்டுள்ளார்.
இது விடயமாக கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எதனோல் எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களான சந்தேக நபர்கள் இருவர் திங்கட்கிழமை (29.05.2017) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இததாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எதனோல் எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மட்டக்களப்பு மற்றும் சித்தாண்டியைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் மீது, மார்ச் மாதம் 21ஆம் திகதி அங்கு பணியாற்றும் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த எதனோல் எரிசாராய உற்பத்தி நிலையம் கல்குடாவில் அமையப் பெறுவதை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.