சென்ற அரசின் காலத்தில் நிதியமைச்சின் செயற்பாட்டல் சேவைகள் குழப்பத்தில்-அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

   கஹட்டோவிட்ட ரிஹ்மி -
சென்ற மஹிந்த ராஜபக்ச யுகத்தில் நிதியமைச்சின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாக திட்டமிடல் சேவை அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. ஏனோ தானோ என்று இச்சேவைக்கு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதால், தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிலைமை எமது அரசிற்கு ஏற்பட்டுள்ளது. காரணம், சென்ற அரசில் இருந்த முக்கியஸ்தர்கள் தாம் நினைத்தவாறு பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு நபர்களை நியமித்தனர். அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் இது தொடர்பான விசாரணைகளை நடாத்தி தீர்வைப் பெறுவது அரசாங்கமாகிய எங்களது பொறுப்பாகும்" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். திட்டமிடல் சேவையுடன் தொடர்புடைய 13 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு சென்ற 23 ஆம் திகதி அரசாங்க நிர்வாக அமைச்சிற்கு வருகை தந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


"திட்டமிடல் சேவையானது இவ்வளவு காலமும் நிதி அமைச்சின் கீழ் இருந்ததுடன், புதிய அரசின் காலத்திலேயே அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இச்சேவையில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை 955 ஆக உள்ள அதே வேளை மொத்தமாக தற்போது சேவையில் 1086 பேர் உள்ளனர். 

இவ்வாறு உள்ளவர்கள் 1994, 1999, 2005 ஆகிய வருடங்களில் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அதில் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர், அபிவிருத்தி கள உதவியாளர், திட்டமிடல் உதவியாளர், வரவு செலவுத்திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல சேவைகள் இருப்பதுடன் இதன் காரணமாக பல பிரச்சினைகளும் உருவாகியுள்ளன. அங்கு வருகை தந்திருந்த சகல தொழிற்சங்க பிரதிநிதிகளின் பிரச்சினைகளையும் அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் நன்றாக செவிமடுத்தனர். 

அமைச்சர் "அரசு என்ற வகையில் எம்மால் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களின் பிரகாரமே செயற்பட முடியும். அதுவல்லாமல் சென்ற அரசு போன்று நினைத்தது போல் தொழில் வழங்கவும், செயற்படவும் முடியாது. திட்டமிடல் சேவைக்கு ஒதுக்கப்பட்ட தொழில் வெற்றிடங்கள் குறிப்பிட்ட தொகை உள்ளது. அதற்குள்தான் இதற்குரிய தீர்வை வழங்கலாம். தற்போதும் இங்கு ஊழிய மிகையே காணப்படுகிறது. சிலர் பரீட்சையில் சித்தியடையவில்லை. சிலருக்கு பரீட்சைக்குத் தோற்ற வாய்ப்புக்கிடைக்கவில்லை. சிலருக்கு பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகப்பரீட்சையில் சித்திகிடைக்கவில்லை. இதுவெல்லாவற்றையும் தேடிப்பார்த்து இது குறித்து சரியான தீர்வை தர முடியும். நிர்வாக சேவையை எடுத்துக்கொண்டாலும், பொறியியலாளர் சேவையை எடுத்துக்கொண்டாலும் அதில் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிடங்களே உள்ளன. 

நாட்டில் ஒரு சட்டமே உள்ளது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்குக் கட்டுப்படவேண்டும். சில தொழிற்சங்கங்கள் இதனை குழப்புகின்றன. அவர்கள் இது தொடர்பில் கலந்துரையாடுவதுடன் தெளிவுடன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இச்சேவைக்காக எமது அமைச்சு மூலம் திறந்த பரீட்சையை நடாத்தவுள்ளோம். சென்ற அரசு இச்சேவையையும் குழப்பியதன் காரணமாக எமக்கும் சிரமமாகவுள்ளது, அதற்காக சகலருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வைப்பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். " என்றார்.


இப்பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, நிறுவன பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.டீ.சோமதாச, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.எம்.பி.ஜே.கமகே ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -