எஸ்.ஹமீத்-
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் வடக்குப் பிரதேசத்தின் பென்பீல்ட் கார்டன் பகுதியில், 39 வயதான இலங்கையைச் சேர்ந்த பர்ஹத் மன்சூர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இவர் இலங்கையின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரென்று கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை இலங்கைத் தமிழர்களென நம்பப்படும் சிலரோடு ஏற்பட்ட தகராறில் பின்புலத்திலேயே இக்கொலை நடைபெற்றிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளாரெனினும் அவரைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.
தகவலறிந்து பொலிஸார் கொலை நடந்த பண்ணை வீட்டிற்குச் சென்றபோது கொலையுண்டவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று ஆறு பேர் கொண்ட குழுவொன்றே குறிப்பிட்ட பண்ணை வீட்டிற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என கொலை செய்யப்பட்டவருடன் தங்கியிருந்த ஒருவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ள போதும், அவ்வேளை தான் பாய்ந்து வெளியே ஓடித் தப்பிவிட்டதாகவும், இக்கொலை சம்பந்தமாக அவுஸ்திரேலிய பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை 34, 44, 48 வயதுடைய மூவரைக் கைது செய்துள்ளதாகவும், அம்மூவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சந்தேக நபர்களுக்கான பொலிஸ் பிணை வழங்கப்படவில்லையென்றும், அம்மூவரும் நாளை திங்கட்கிழமை எலிசபெத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.