எம்.ரீ.ஹைதர் அலி-
ஷிப்லி பாறுக் ஹசனலியுடன் இணைய முஸ்தீபு முக்கியஸ்தர்கள் பலரும் பேச்சு எனும் தலைப்பில் இணையத்தளம் ஒன்றில் போலியான செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தனது மறுப்பை தெரிவிக்கும் வகையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தனது அறிக்கையில் நான் தற்பொழுது அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை பலப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கும்தான் சிந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் ஹசனலி அவர்களுக்கும் பிரச்சினைகள் தோற்றம்பெற்ற நாளிலிருந்து ஒரு சந்தர்ப்பத்தில் கூட நான் ஹசனலியுடன் பேசியதாகவே அவருடன் தனிப்பட்ட வகையில் சந்திப்புக்களை மேற்கொண்டதாகவோ கிடையாது எனவும் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு ஆதராமற்ற முறையில் அரசியல்வாதிகளுடன் சம்மந்தப்பட்ட செய்திகளை தங்களின் இணையத்தளங்களில் பிரசுரிக்கும்போது அதனை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளிடமோ அல்லது அவர்களுக்கு பொறுப்பான ஊடப்பிரிடமோ செய்தியின் உண்மைத் தன்மையினை கேட்டறிந்து தங்களது இணையத்தளங்களில் பிரசுரிக்க வேண்டும்.
வெறுமெனே ஊர்ஜிதப்படுத்தப்படாத நிலையில் பெயர்கள் குறிப்பிடப்படாமல் தங்களின் இணையத்தளங்களுக்கு வரும் செய்தியினை ஆதாரமற்ற முறையில் பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதனை இவ்வாறான இணையத்தளங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.