எஸ்.ஹமீத்-
புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நிலைமை தொடர்பில் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா ''ஆட்சியை கவிழ்க்கப்போவதாகக் கோரும் மஹிந்தவின் பொறிக்குள் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் மற்றும் மங்கள சமரவீர , சந்திரிகா குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிக்கியுள்ளனர்.'' எனத் தெரிவித்துள்ளார்.
''புதிய அரசியல் அமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு முறையை கோரும் சம்பந்தன், அதன் பின்னர் பிரதமர் பதவியில் மஹிந்தவா அல்லது ரணிலா அமரவேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். சம்பந்தன் கூறுவது போன்று புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசாங்கத்தில் மாற்றங்கள் நிகழலாம். மகிந்தவின் பொறிக்குள் சம்மந்தன், மங்கள சமரவீர , சந்திரிகா குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிக்கியுள்ளதன் காரணமாகவே சர்வஜன வாக்கெடுப்பினை இவர்கள் கோருகின்றார்கள். ஆனால் அதற்குப் பின்னர் ஏற்படும் விபரீதங்களை இவர்கள் அறியவில்லை.'' என்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
