சுலைமான் றாபி-
சகல வசதிகளும் கொண்ட நிர்வாகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பது சம்பந்தமாக சுகாதாரப்பிரதியமைச்சர் பைசால் காசிம் இன்றைய தினம் (14) பாலமுனை வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
பாலமுனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பேரில், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவருமான ஏ.எம். அன்ஸில் தலைமையில் இடம்பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவே அமைச்சரின் இந்த விஜயம் அமைந்திருந்தது.
மேலும் ஏற்கனவே பிரதியமைச்சரினால் வாக்குறுதியளிக்கப்பட்ட சகல வசதிகளும் கொண்ட நிர்வாகக் கட்டிடம் எவ்விடத்தில் அமையப்பெறவேண்டும் என்பது பற்றிய பூர்வாங்க வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும், வைத்தியசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் இந்த விஷேட சந்திப்பு இடம்பெற்றதோடு, விரைவில் நிர்வாகக் கட்டிடத்தினை அமைத்துத் தருவதற்கும் பிரதியமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை சின்னப்பாலமுனை பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர், அந்த பகுதியில் காணப்படும் கடற்கரை வீதிக்கு புதிய மின்னிணைப்பினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்ததோடு, மீன் பிடித் தொழிலில் மீனவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ரி. சப்ராஸ், இணைப்பாளர் எம்.ஐ. உமர் அலி உள்ளிட்ட பாலமுனை முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.