அப்துல்சலாம் யாசீம்-
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மரதங்கடவெல பகுதியில் பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (06) கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி.ஜே.பிரபாகரன் உத்தரவிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை. சுஹதகம பகுதியைச்சேர்ந்த தினேஸ் மதுசங்க (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- கடந்த 09ம்மாதம் 24ம் திகதி பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமி வீட்டுக்கு வரவில்லையென பெற்றோர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹொரவ்பொத்தானை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இளைஞனொருவனை கைது செய்து விசாரணை செய்த போது சிறுமி உயிருடன் இருப்பதாகவும் தெரியவந்தது.
சிறுமியை மீட்டடுத்த பொலிஸார் வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்ட வேளை சிறுமி துஷ்பிரயோகத்திற்குற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இளைஞனுக்கு சிறுமியை கடத்திச்செல்ல உதவியவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.