கிரான்-கோமாரி காணிப் பிரச்சினை : நிந்தவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சுலைமான் றாபி-
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் கிரான்-கோமாரியில் காணிச்சொந்தக்காரர்களாக இருக்கும் விவசாயிகள் இன்று (26) வெள்ளிக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கிரான்-கோமாரி கண்டத்தின் நிந்தவூர் விவசாயிகள் அமைப்பினரால் இரண்டாவது முறையாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 1957ம் வருடத்தில் பெறப்பட்ட காணிகளுக்கான உறுதிகளையும், அக்காணிகளைச் செய்கை பண்ணுவதற்கான உத்தரவாதங்களையும் இதுவரையில் வந்த அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் அக்காணி அனுமதிப்பத்திரத்தினை அங்கீகரிக்காமல் காலங்கடத்துவதோடு, தங்களது சொந்தக் காணிகளை வழங்கும் விடயத்தில் கால இழுத்தடிப்பு செய்யப்படுவதைக் கண்டித்தும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த விடயம் சம்பந்தமாக அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட 08 பேர் அடங்கிய குழுவினரை அமைத்து இந்தப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, இந்த பிரதேசத்தில் உள்ள காணிச் சொந்தக்காரர்கள் தங்களுக்கு 1957 ம் ஆண்டில் வழங்கப்பட்ட மூல (Original) காணி அனுமதிப்பத்திரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளையும் யாராலும் மறுதலிக்க முடியாத ஆவணங்களையும், அதன் அடையாளங்களையும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

ஆனால் கடந்த பயங்கரவாத காலத்தில் இதனை கைவிட்டு விட்டு சென்றதனால் தற்போது அது காடுகளாய் காட்சி தருவதனால் இந்த காணிகளை விடுவிக்கும் விடயத்தில் அரச அதிகாரிகள் பொடுபோக்குடன் செயற்படுவதாகவும், கால இழுத்தடிப்பு செய்யப்படுவதோடு இவ்வதிகாரிகளால் காணிச் சொந்தக் காரர்களிடத்தில் காணி வரைபடம் கேற்கப்படுவதாகவும் இதன் மூலம் தங்களது காணிப் பிரச்சனைகளை வீண் காரணங்கள் மூலம் கிடப்பில் போட திரைமறைவில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் கண்டனக் கோஷங்களை எழுப்பியதோடு, பயங்கரவாத காலத்தில் தங்கள் பயங்கரவாதிகளினால் விரட்டப்பட்டபோது தற்போது அதிகாரிகளால் வதைக்கப்படுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கிரான் கோமாரி விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர். யு. அப்துல் ஜலீலிடத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கிரான் கோமாரி விவசாயிகளை சந்தித்த நிந்தவூர் பிரதேச செயலாளர்; இந்தக் காணிப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் கிடைக்குமென்றும், அது இலகுவாக தீர்த்துக் கொள்ளப்படக்கூடிய விடயமாகும் என அரசாங்க அதிபர் தன்னிடம் உறுதியளித்ததாக நிந்தவூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -