ஊடகப் பிரிவு-
மத்திய கிழக்கின் புகழ் பெற்ற பிரபல மார்க்க அறிஞர் கலாநிதி. ஹபீப் அபூபக்கர் அல் மசூர் அவர்கள் நேற்றைய தினம் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் ஏ.எல்.எம். ஹலீம் ஆகியார்க்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நேற்றைய தினம் அமைச்சு அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந்தச் சந்திப்பில் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களும் அமைச்சரின் செயலாளர் உட்பட இரு தரப்பு முக்கியஸ்தார்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கலாநிதி.ஹபீப் அபூபக்கர் அல் மசூர் அவர்கள் உரையாற்றுகையில், இலங்கை முஸ்லிம்களுக்கு அரசு வழங்கி இருக்கும் முக்கியத்துவங்கள் பற்றி மெச்சினார். முஸ்லிம் சமூகத்தின் விடயங்களைப் பேண ஒரு தனியான அமைச்சு இருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. இதன் மூலம் எம் சமூகம் அளப்பரிய சேவைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இவ் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச நிர்வாகத்தை மானசீகமாய் நாம் பாராட்ட வேண்டும். மேலும், இலங்கை முஸ்லிம்கள் நடு நிலைச் சமுதாயமாய் மாற வேண்டிய தேவையில் இருக்கிறோம். பல்லின மக்கள் வாழும் இந்த தேசத்தில் பரஸ்பர புரிந்துணர்வு, சகோதரத்துவம்,அன்பு,சுபீட்சம் மேலோங்க இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நடு நிலை பேணி நாம் வாழ வேண்டும்.இதன் மூலமே அமைதியான, இனத்துவ விரிசல்கள் இன்றி நாம் நிம்மதியாய் வாழலாம்.
மேலும், இலங்கையில் முஸ்லிம் அரபு மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்வது பற்றியும் இரு தரப்பில் கலந்துரையாடப்பட்டது. மார்க்க அறிஞர், கலாநிதி. ஹபீப் அபூபக்கர் அல் மசூர் அவர்களின் வருகை குறித்து அமைச்சர் ஹலீம் அவர்கள் தனது ஆதமார்த்தமான மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.