கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்மீது வடமாகாணசபையின் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். இத்தாக்குதலில் இரா.சம்பந்தன் காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை சாந்தி சிறீஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பான விவாதம் சர்ச்சையாக மாறி அந்தப் பதவி பேராசியரியர் சிற்றம்பலத்துக்கோ அல்லது பொருத்தமான நபருக்கோ வழங்கப்பட்டிருக்கவேண்டுமென வாதிட்டுக்கொண்டிருந்த அன்ரனி ஜெகநாதன் ஒருகட்டத்தில் கோபமடைந்து ஒலிவாங்கியை சம்பந்தனை நோக்கி எறிந்துள்ளார். இத்தாக்குதலில் சம்பந்தன் காயங்களின்றி மயிரிழையில் தப்பியுள்ளார். இதன்பின்னர் அருகிலுள்ளவர்கள் அன்ரனி ஜெகநாதனை ஆசுவாசப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் தனது அரசியல் எதிர்காலத்தை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதுகில் குத்தி இல்லாதாக்குவதாக பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்த நிலையில் தான் சிவஞானத்தின் நெஞ்சில் குத்தப்போவாதாக அன்ரனி ஜெகநாதனோ பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
தனது அரசியல் எதிர்காலத்தை இல்லாதொழிப்பதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மீது குற்றஞ்சாட்டியே அன்ரனி ஜெகநாதன் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.