பைஷல் இஸ்மாயில் –
கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெற்ற மாவட்டங்களாக கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளதாகவும் இந்த சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துவருவதாகவும் சாய்ந்தமருது சமூக வைத்திய நிலைய வைத்தியர் எம்.ஜே.எம்.ஹஸ்ஸான் இன்று (15) தெரிவித்தார்.
”சிறுவர்களை பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி முஸ்லிம் அமைப்பு நிறுவனங்களினால் நடாத்தப்படும் அநாதை பிள்ளைகளின் தாய்மார்களுக்கான கருத்தரங்கு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றது. சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 10732 முறைப்பாடுகளும், 2014 ஆம் ஆண்டில் 10315 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் பல திட்டங்களை முன்வைத்து இன்றைய அரசும், இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி போன்ற முஸ்லிம் அமைப்பினர்களும் பல திட்டங்களை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.
விஷேடமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 12 அநாதை இல்லங்களில் இருக்கும் 1000 பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடங்களாக கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், உளநலம், போசாக்கு, சுகவாழ்வு, சகவாழ்வு போன்றவற்றுக்காக தலா 7000 ரூபா வீதம் வழங்கி வருகின்ற இதேவேளை சிறுவர்களின் தாய்மார்களுக்கான வைத்திய செலவினையும் செய்து குறித்த சிறுவர்களின் தாய்மார்களுக்கு மத்தியில் துஷ்பிரயோகம் தொடர்பான தெளிவூட்டலை வழங்கி தெளிவூட்டுவதன் மூலமும் இவ்வாறான துஷ்பிரயோங்களை குறைக்க முடியும் என்றார்.
அத்துடன், இல்லங்களில் இருக்கின்ற அநாதைக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மிக அதிகமான பயிற்சிகளை வழங்குவதற்கான பல திட்டங்களையும் குறித்த அமைப்பினர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு பல புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைககளை நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதுதான் இந்த சிறுவர்களின் துஷ்பிரயோகம் குறைவடைய சாத்தியம் மிக அதிகமாவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.