முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒன்றிணைந்து இராணுவத்தினரை யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் பத்து இலட்சம் கையெழுத்து வேட்டை ஒன் றினை முன்னெடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் எட்டாம் திகதிமுதல் இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இராணுவ வீரர்களை யுத்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கவும், நல்லாட்சி அரசாங்கத்தின் அராஜகத்தன்மையான விடயங்களை எதிர்த்தும் நாடு தழுவிய ரீதியில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் விதமாக இப்போராட்டம் அமையவுள்ளதாக இராணுவ வீரர்களை பாதுகாக்கும் இயக்கத்தின் செயலாளர் வணக்கத்துக்குரிய பென்கமுவ நாலக்க தேரர் தெரிவித்தார்.
கொழும்பு சம்புத்தாலோக விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
இந்நாட்டில் இராணுவ வீரர்களின் நலன் தொடர்பில் யாரும் கண்டுகொள்வதில்லை.
முப்பது வருட கால யுத்தத்தினை நிறைவு செய்து மக்களின் சுமூகமான வாழ்வுக்கு இவர்களே காரணமாவர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களை சிறைக்கு அனுப்ப முயல்கின்றது. குறித்த அராஜக தன்மையான விடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடுதழுவிய ரீதியில் கையெழுத்து வேட்டைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
பத்து இலட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையிலான போராட்டம் எதிர் வரும் 8 திகதியன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆரம்பமாகும்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இராணுவ வீரர்களை பாதுகாக்கும் வகையில் மக்களின் ஆதரவோடு குறித்த கையெழுத்துப்பெறும் நிகழ்வு இடம்பெறவுள்ளது என்றார்.