சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு திகதி இன்று அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிந்துள்ளது. விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதனிடையே திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் முன்வைத்த வாதத்தை ஏற்கக் கூடாது என்றும், அன்பழகன் தரப்பும், கர்நாடக அரசும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதும் பணியை தீவிரமாக மேற்கொண்ட நிலையில், தீர்ப்பு திகதி இன்று அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீர்ப்பு எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் நீதிபதி குமாரசாமி வெள்ளிக்கிழமை இதுதொடர்பான தகவலை நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவிப்பார். அதனை தொடர்ந்து பதிவாளர் வெள்ளிக்கிழமை தீர்ப்பு தேதியை முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அநேகமாக உச்ச நீதி மன்றத்தின் கால அவகாசம் முடிவதற்குள் அதாவது மே 11-ம் திகதியோ அல்லது மே 12-ம் திகதியோ தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.(ந)