யு.எம்.இஸ்ஹாக்-
வில் பத்து காட்டை அழித்து முஸ்லிம்களை அமைச்சர் றிசாட் பதியுதீன் மீள் குடியேற்றம் செய்யவில்லை என்பதை அண்மையில் 4 பஸ்களில் வில் பத்து பிரதேசத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட சிங்கள கடும் போக்கு இனவாத இயக்கமான சிங்கள ராவய என்ற அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் இது வரைக்கும் எவ்விதமான அறிக்கைகளை விடவுமில்லை , எவ்விதமான குழப்பங்களிலும் ஈடுபடவுமில்லை .
சட்ட விரோதமாக வில் பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்களை அமைச்சர் றிசாட் பதியுதீன் மீள் குடியேற்றம் செய்யவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு இல்லாதளவு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு வில் பத்து பிரதேசத்துக்கு பஸ்களில் வந்து இறங்கிய இனவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பினர் மீள் குடியேற்றத் திட்டம் நடை பெற்ற பிரதேசத்தை பார்வையிடச் சென்ற போது எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள் . அங்குள்ள முஸ்லிம் மக்கள் . இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் 25 வருட காலம் அகதி வாழ்க்கை வாழ்ந்த மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்று அவர்களுக்குப் புரிந்திருக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதொச நிறுவனத்தின் பணிப்பாளருமான சி.எம். முபீத் நற்பிட்டிமுனையில் நடை பெற்ற வைபவமொன்றில் கூறினார் .
அல் -கரீம் நெசவாளர் மற்றும் சமுக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சீ .எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முபீத் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார் . அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் .
முஸ்லிம் மக்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் 4 பஸ்களில் வந்தவர்கள் 40 அம்பியுலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைகளுக்கு சென்றிருப்பார்கள் . எந்த இனவாத அமைப்புகளுக்கும் பயந்து அஞ்ச வேண்டிய தேவை எமது தலைவருக்கு கிடையாது. சலுகைக்காக எங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் . வில்பத்து சரணாலயத்தை சட்ட விரோதமாக அழித்து இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள முஸ்லிம்களை குடியேற்றி புதியதோர் கிராமத்தை உருவாக்கி வருகிறார் என சிங்கள கடும் போக்கு இனவாத இயக்கங்களான பொதுபலசேனா , சிங்கள ராவய ,புதிய சிஹல உருமய போன்ற அமைப்புக்கள் தென் இலங்கை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் பொய் வதந்திகளைப் பரப்பி அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அரசியல் குளிர் காய நினைக்கின்றார்கள் .
இந்த அப்பட்டமான பொய் வதந்திகளை நிறுத்தி இத்துடன் விளக்கம் கூற வேண்டும். நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இடம் பெயர்ந்து வாழ்ந்த வட புலத்து பெரும்பாலான முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றிய அமைச்சருக்கு இந்த நல்லாட்சியில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதில் எந்த சவால்களும் இருக்காது என நினைக்கின்றோம். அன்று மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுள் பெரும் பங்கை வகித்தவர்கள் நாங்களும் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசுமே , அதே போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களுள் பெரும் பங்காற்றியவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுமே .
வட புலத்து மக்களின் மீள் குடியேற்றத்தை பல கோணங்களில் இனவாதமாக சித்தரிக்கின்ற இனவாத அமைப்புக்களுக்கு எதிராக நமது முஸ்லிம் தலைமைகள் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் வாய் மூடி மௌனிகளாக இருப்பதைக் கண்டு வெட்கப் படுகின்றேன் வட மாகாணத்து முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ ,அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ முதலில் குரல் கொடுப்பவர் அமைச்சர் றிசாத் பதியுதீனே. முஸ்லிம் சமுகத்திற்காக பொலிஸ்மா அதிபரோடும் முரண்பட்டிருக்கின்றார். என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர்தான் . இலங்கை முஸ்லிம்களுக்கு பொருத்தமான தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் .இதே போன்று அம்பாறை மாவட்டத்து மக்களும் அமைச்சர் ரிசாடின் கரங்களைப் பலப் படுத்தி அரசியல் அனாதைகளாக இருக்கின்ற எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய முன் வர வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் வேண்டுகோள் விடுத்தார் .
வில் பத்து காட்டை அழித்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் மக்களை சட்ட விரோதமாக குடியேற்றி வருகின்றார் என பொய்யான செய்திகளை திரிபு படுத்தி பல கோணங்களில் அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக சில தனியார் ஊடகங்கள் பல மணி நேரத்தை செலவழித்து பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இந்த செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சரைப்பற்றி காலை தொடக்கம் இரவு வரைக்கும் பல இலட்சம் ரூபாய் பணங்களை வீண் விரயம் செய்து தொடர்ச்சியாக அவர் பெயர் நாமத்தையே உச்சரிக்கின்றார்கள்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் அறிகின்ற வரைக்கு எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் றிசாத்தினையும் ஒளிபரப்பு செய்து காட்டியதற்காக நாங்கள் நன்றி கூறுகின்றோம். மக்கள் அமைச்சரின் உரையையும் கேட்டு விட்டார்கள். அவரது முகத்தையும் நன்கு பார்த்து விட்டார்கள். இதற்கு மேலும் எமது தலைவரைப் புகழ வேண்டாம் என இந்த ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என முபீத் தனது உரையில் குறிப்பிட்டார்.(ந)
