நட்சத்திர சேனலில் பிரபலங்களோடு காபி குடித்து கலந்துரையாடும் தொகுப்பாளினி அந்த சேனலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியின் செயல்பாடு சரியில்லை என்று பகிரங்கமாகவே பேசப்பட்டது. இதற்கு கூப்பிட்டு கண்டித்த சேனல் தரப்பு அவர் தொகுத்து வந்த நிகழ்ச்சியை இரண்டு சீசன்களோடு முடித்துவிட்டனராம். கடைசியாக ஒளிமயமான நடிகையோடு அவர் குடித்ததுதான் கடைசி காபியாம். அப்புறம் யாருடனும் தொகுப்பாளினி காபி குடிக்கவில்லையாம்.
தொகுப்பாளினியும் வேறு சேனல் தேடி வருகிறாராம். சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய அவருக்கே இந்த கதி என்று புலம்பும் நட்பு வட்டாரங்கள், சேனல் தரப்பையும், தொகுப்பாளினியையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம்.
சினிமா பிரபலங்களை அழைத்து விருது வழங்கும் அந்த நட்சத்திர டிவியில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. காரணம் சினிமா நட்சத்திரங்களை சரியாக கவனிக்கவில்லை என்பதுதானாம். கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு சரியாக சினிமா பிரபலங்கள் யாரும் வரவில்லை. வந்தவர்களும் பாதியிலேயே கழன்று கொண்டனர். எனவே இந்த ஆண்டோடு விருது விழாவிற்கு மூடு விழா நடத்திவிடலாமா என்று யோகிக்கிறதாம் நட்சத்திர சேனல்.(ந)