ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்பதை அரச தரப்பினர் உணர்ந்து விட்டனர். தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே வன்முறைகளை கையாள்கின்றனர். எனினும் அரசாங்கத்தின் ஆயுத கலாசாரத்தின் மூலம் ஊவா தேர்தலை வெற்றி கொள்ள ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வன்முறைகளினால் தேர்தல் பிற்போடப்படுமாயின் அது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஊவாவில் வன்முறைகளை கட்டுப்படுத்தா விட்டால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் ஜே.வி.பி. யின் கருத்தினை வினவிய போதே அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆட்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலென்பது தெரிந்தும் அரசாங்க தரப்பினர் வெற்றியை வன்முறைகளின் மூலம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் பிரசார மேடைகள் கூட்டங்களில் தாக்குதல்களை நடத்துவதனாலும் துப்பாக்கிகளை காட்டி மிரட்டுவதானாலும் எதிர்க்கட்சிகளை அடக்கி விடலாம் என அரசாங்கம் நினைக்குமாயின் அதுவே அரசாங்கத்தின் வீழ்ச்சியென நினைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் தினம் நெருங்கும் நிலையில் அரசாங்கம் தனது உண்மையான நிலைமையை உணர்ந்து விட்டது. தமது தோல்வி உறுதியாகியுள்ளமை தெரிந்தமையாலேயே தற்போது ஊவாவில் ஆயுத அடக்குமுறைச் செயற்பாடுகளை கையாள்கின்றது.
வன்முறைகளின் மூலம் அப்பாவி மக்களை அச்சுறுத்தி தமது ஆயுத பலத்தை வெளிப்படுத்தி ஊவா மாகாண சபைத் தேர்தலை வெற்றி கொள்ளலாம் என அரசாங்கம் நினைத்தால் அதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஊவா தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் கற்பிப்போம்.
மேலும், வன்முறைகளை மேற்கொள்வதும் தேர்தல் சட்டத்தினை மீறுவதும் இந்த அரசாங்கமே. இது வெளிப்படையாக தெரிந்தும் தேர்தல்கள் ஆணையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார். பொலிஸாரும் பாதுகாப்பு குழுக்களும் அரசாங்கத்தின் பக்கம் செயற்படும் போது வன்முறைகளையும் சட்ட மீறல் செயற்பாடுகளையும் தடுப்பது இயலாத காரியமே. அதற்காக தேர்தலை பிற்போடுவதால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாது. எனவே, ஜனநாயக ரீதியில் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தேர்தலினை நடத்தியாக வேண்டும். காலத்தினை பிற்போடுவதும் அரசாங்கத்திற்கு பயந்தும் ஊவா தேர்தலை பிற்போட்டால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலெனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment