தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் அபாயாவுக்கு ஆப்பு! இம்ரான் மஹ்ரூப் குற்றச்சாட்டு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகமம் பிரதேச செயலகத்தில் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் அபாயா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை அப்பட்டமான உரிமை மீறும் செயலாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக தமது கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணி நடந்து வருகின்றனர். அதில் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவும் ஒன்றாகும். ஆனால் இன்று அந்த அபாயா அணிவதற்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. 

தம்பலகமம் பிரதேச செயலாளர் அங்கு பணி புரியும் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களை அழைத்து இனி அபாயா அணியக் கூடாது சாரியே அணிந்து வர வேண்டும். திங்கட்கிழமை முதல் இது அமுல் படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதோடு எழுத்து மூலமும் கொடுத்துள்ளார் அங்குள்ள சமூகத்தலைவர்களும், பெற்றோர்களும் இ;தனை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

மாவட்டச் செயலாளரின் உத்தரவுப்படியே தான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தம்பலகமம் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். புல்மோட்டைக் காணிப்பிச்சினை, தோப்பூர் நாவற்கேணிக் காடு காணிப்பிரச்சினைகளிலும் அங்குள்ள பிரதேச செயலாளர்கள் இதே கருத்தையே தெரிவித்துள்ளனர்.
அப்படியாயின் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை முற்று முழுதாக ஒடுக்கி வருகின்றது என்பதற்கு இவற்றை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். முஸ்லிம்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் நடக்கின்ற போதிலும் நமது முதலமைச்சரும், முஸ்லிம் உரிமைகள் பற்றி பேச வந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

எந்தப் பிரச்சினைக்கும் அவர்களால் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தும் எந்த ஒரு பிரதேச செயலகத்திலும் முஸ்லிம் பிரதேச செயலாளர் இல்லை. மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர் இல்லை என்ற விடயங்களை இதற்கு முன்னரும் நான் தெளிவு படுத்தியுள்ளேன். முஸ்லிம் அதிகாரிகள் இருந்தால் இப்படியான பிரச்சினை எழாமல் தவிர்க்க முடியும்.

எனினும் முஸ்லிம் பிரதேச செயலாளரையோ அல்லது மாவட்ட செயலகத்தின் ஏதாவது பதவிக்கு முஸ்லிம் உத்தியோகத்தரையோ நியமிக்கின்ற சக்தி முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கோ இல்லை என்பதை மிகத் தெட்டத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். அவர்களால் முடிந்தால் இரு வாரங்களுக்குள் ஆளுக்கொரு முஸ்லிம் அதிகாரியை நியமித்துக் காட்டட்டும் எனச் சவால் விடுகின்றேன்.

அயாயா என்பது முஸ்லிம்களின் கலாசார உடை. இன்று திருகோணமலை மாவட்டத்தில் வுpதிக்கப்பட்டுள்ள தடை ஒரு ஒத்திகை. அடுத்த கட்டம் நாடு முழுவதும் இந்த தடை வரப்போகின்றது என்பதற்கு முன்னுதாரணம் இதுவாகும். எனவே முஸ்லிம் சமூகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது விடயத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று படவேண்டும்.
முன்னர் பொதுபலசேனா அபாயாத் தடை பற்றிக் கூறிய கருத்துக்களை நினைவு படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. 

அதற்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட வேண்டியுள்ளது. பள்ளிவாயல் உடைக்கப்படுகின்ற பிரச்சினை, கிரிஸ் மனிதன் பிரச்சினை, ஹலால் பிரச்சினை, காணிப் பிரச்சினைகள், முஸ்லிம்களின் வீடு, சொத்துக்கள் அழிக்கப்படுகின்ற பிரச்சினை எனப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனவே தவிர எதுவும் குறையவில்லை.

எனவே, இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் தமது உரிமைகளைப் பாதுகாத்து நிம்மதியாக வாழ அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிராக ஒன்று படவேண்டும். இது தான் இன்று நம் முன்னுள்ள ஒரே தீர்வாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :