நடிகை கனகா குறித்த செய்தி வெளியானதும், அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால் அதனை மறுத்தார். அதே சமயம் சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும், எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர மறுப்பதாகவும் அவர் ஊடகங்களை தொடர்பு கொண்டு கூறினார்.
இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து கனகா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நலமாக உள்ளதாக கூறிய அவர், தமது உடல் நலம் பற்றி வெளியான செய்தி குறித்து வேதனை தெரிவித்தார். கேரளாவில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்கவே தாம் அங்கு சென்றதாகவும், தமக்கு புற்று நோய் எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கனகா (40), 1989ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனுடன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய அந்த படத்தின் பிரபலமான கனகா, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு சென்றார்.
முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான இவர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.
முகேஷ் உடன் இணைந்து நடித்த ‘காட்பாதர்’ என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தது. இதனால் எந்நேரமும் பிசியாக இருந்த நடிகை கனகா, 1990 ஆம் ஆண்டு இறுதிகளில் திடீரென காணாமல் போனார்.
2000வது ஆண்டில் அவரது தாயாரும் மறைந்து போக கனகா தனிமரம் ஆனார். இந்த நிலையில் கனகா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், அவரை கவனிக்கவும், பராமரிக்கவும் ஆளில்லாமல் திண்டாடுவதாகவும் செய்திகள் வெளியானது. காலப்போக்கில் அதுவும் நின்று போக கனகாவின் நிலை என்ன? என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக 2 தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி - விகடன்

0 comments :
Post a Comment