
அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி குளத்தை சூழவுள்ள வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை உள்ளடக்கியதாக யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் முன்னிலையில் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (2013.05.23) சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடலின் போது 1100 ஏக்கர் விவசாய நிலங்களை பாதிக்கும் இந்த முயற்சிக்கு உரிய தீர்வு கண்டு சுமுகமாக தீர்த்து வைப்பதன் அவசியத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப்ஹக்கீம் வலியுறுத்தினார்.
அத்துடன் யானைகளின் நடமாட்டம் உள்ள இவ்வாறான அண்மித்த பிரதேசங்களிலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி தலைமையில் சந்திப்பொன்றை நடாத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தவிர விவசாயிகள் தொடர்பான ஏனைய சில விடயங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் வளத்தாப்பிட்டி கரங்காவட்டை பிரதேசத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் ஹக்கீமும் அவரது குழுவினரும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் நிலைமையை நேரில் பார்வையிட்டனர். அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹஸனலி, எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மு.கா.மாவட்ட பொருளாளர் ஏ.சி.எஹியாகான், மாகாண சபை உறுப்பினரான ஏ.எல்.தவம்,அம்பாரை பிரதான பொறியியலாளர் எம்.நாகரெத்தினம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், வனபரிபாலன திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.லலித்குமார, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண ஆகியோர்கள் அடங்கலாக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment