முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொரு சமூகத்தினரதும் சமய மற்றும் கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அரசியலமைப்பையும் சட்டத்தையும் பேணி நடப்பது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும்.
இந்த உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய நடைமுறைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
சில அரச உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும். இது அரசாங்கம் முன்னெடுத்து வரும் தேசிய ஒற்றுமை மற்றும் வளமான நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையையும் கேள்விக்குறியாக்கும்.
எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அடிக்கடி தேவையற்ற தலையீடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் தெளிவானதும் உறுதியானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சட்டரீதியானதும் நியாயமானதுமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment