புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சகோதரிகள் தின விழா – 2026", முதலில் பூண்டுலோயாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக நிகழ்வின் இடம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நிகழ்வு 2026 ஆகஸ்ட் 9 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு, வவுனியா மாநகர சபையின் கலாசார மண்டபத்தில், மகளிர் அணியின் தலைவி சிவகெளரி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
பெண்களின் ஒற்றுமை, சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயப் பணிகளை முன்னிறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் இடம்பெறவுள்ளன.
நிகழ்வின் சிறப்பு அம்சங்களாக,பாடசாலை நூலகங்களுக்கு பயனுள்ள நூல்கள் அன்பளிப்பு செய்தல், காப்பகங்களில் வாழும் பெண் சிறார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், பெண்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சிறப்பு கவியரங்கம், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளன.
சிறப்பு கவியரங்கத்தில் கவிஞர்கள் சிபானியா, பாத்திமா, டாலினி, தர்மினி மற்றும் சிறீகலா ஆகியோர் பங்கேற்று, பெண்மையின் பெருமை, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட தங்களது கவிதைகளைப் பகிரவுள்ளனர்.
சமூகத்தில் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மனிதநேய உணர்வுகளை வலுப்படுத்தும் இந்த அர்த்தமிக்க நிகழ்வில், பெண்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments :
Post a Comment