இன்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, மாணவர்களின் ஆரம்பக் கல்விப் பயணத்தில் முக்கியமானதொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இப்பரீட்சைக்காக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் தயாராகி வரும் மாணவர்கள், தங்களது அறிவு, திறமை மற்றும் தன்னம்பிக்கையை பரீட்சை மண்டபத்தில் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் முனாஸ் மொஹிதீன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தாங்கள் மேற்கொண்ட கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் எவ்வித பதற்றத்திற்கும் இடமளிக்காமல் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். தங்களால் முடிந்தளவு சிறப்பாக விடையளிப்பதுடன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிடும் ஒரு பரீட்சையாக மட்டுமன்றி, அவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளுக்கும் புதிய பாதைகளைத் திறக்கும் முக்கியமான கட்டமாகவும் காணப்படுகிறது. எனவே, மாணவர்கள் பெறுபேறுகளைப் பற்றிய தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தங்களது கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளை வெற்றிகரமாக அடைய வேண்டும் எனவும், அவர்களது கனவுகள் நனவாக வேண்டும் எனவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வாழ்த்தியுள்ளது.
“இன்று பரீட்சை மண்டபத்திற்குச் செல்லும் ஒவ்வொரு மாணவரும் வெற்றிக்கான நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். அவர்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் சிறந்த பலன் கிடைக்கட்டும். அனைத்து மாணவர்களுக்கும் எமது இனிய நல்வாழ்த்துக்கள்” என ஊழியர் சங்கத்தின் தலைவர் முனாஸ் மொஹிதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
முனாஸ் மொஹிதீன்
தலைவர்,
ஊழியர் சங்கம்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

0 comments :
Post a Comment