கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (19.08.2026) அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியது.
கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பின்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அதன் சீரான செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்பட்டுள்ள உணர்வுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ. சிறிநாத், ஞா. சிறிநேசன், இரா. சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கவலையை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உணர்வுகளை அமைதியான முறையில் கையாள்வதுடன், இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, இவ்விவகாரத்திற்கு சுமூகமான தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து, நிலைமையை சுமூகமாகக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

0 comments :
Post a Comment