அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் காணொளி பதிவு செய்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அரச உத்தியோகத்தர், நிந்தவூர் பிரதேச செயலாளர் தனது கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரை காணொளியாகப் பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பின்னர் அந்தக் காணொளியை சமூக வலைத்தளமான முகநூலில் பதிவேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த பெண் அரச உத்தியோகத்தர் செவ்வாய்க்கிழமை (18) மாலை நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது திடீரென அதிர்ச்சியடைந்து மயங்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவர் உடனடியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(முகப்புப்படம் Ai மூலம் உருவாக்கப்பட்டது)

0 comments :
Post a Comment