ஓசோனில் ஓட்டை(கவிதை)



ஓசோனில் ஓட்டை
++++++++++++++++
Mohamed Nizous

ஆகாயம்
அதன் நெஞ்சில்
ஓர்
ஆறாக் காயம்

இந்தக் காயம்
பகையால் வந்ததல்ல
புகையால் வந்தது.

காயம்
காய்ந்து
ஆறிப் போக வேண்டும்
தவறினால்
இந்தப் பூமி
தேய்ந்து
நாறிப் போகும்

காயத்துக்கு
கட்டுப் போட வேண்டியவர்களே
காபனை சுட்டுப் போடுவதால்
வெங்காய அளவில் இருந்த
விஞ்ஞானக் காயம்
பெருங் காயமாகி
பிரச்சினை தருகிறது.

உண்ணும் பெருங்காயம்
உடலின் வலி நீக்கும்.
விண்ணின் பெரும் காயம்
மண்ணின் வளி நீக்கும்
அதன் மூலம்
வாழ்கின்ற வழி நீக்கும்.

ஓசோனை அழிப்பது
ஆசானை அழிப்பது போல
ஓசை இல்லாமல்
உலகம் கெட்டுப் போகும்.

இந்த
ஓசோன் படை
உலகக் கோட்டை காக்கும்
ஒப்பற்ற படை.
அதை அழித்தால்
ஊதாக் கதிர்
படை எடுத்து
உடைத்துத் தள்ளிவிடும்
உள் இருக்கும் உயிர்களையும்.

ஓசோன்
உயிர் காக்கும்
படை
அதில் விழும் ஓட்டை
அனைவருக்கும்
பாடை...


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -