2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இன்றைய நவீன உலகின் போட்டி நிறைந்த சூழலிலும், குறுகிய காலத் தயாரிப்புகளுடனும், பல்வேறு சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
இந்த மகத்தான சாதனையின் பின்னணியில் தமது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பல தியாகங்களைச் செய்து, பொருளாதார சிரமங்களையும் பொருட்படுத்தாமல் உறுதுணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, இரவு பகலாக அயராது உழைத்து மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வழிகாட்டிய ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், கல்விச் சூழலை சிறப்பாக அமைத்துத் தந்த அதிபர்கள் மற்றும் கல்விச் சமூகத்தின் அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய வெற்றி உங்கள் எதிர்காலத்தின் முதல் படிக்கட்டாக அமையட்டும். மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் சிறந்த பிரஜைகளாக நீங்கள் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
– ரஹ்மத் மன்சூர்
ஸ்தாபகர் – ரஹ்மத் பவுண்டேஷன்
தேசிய பொருளாளர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

0 comments :
Post a Comment