இந்த முன்மொழியப்பட்ட சட்டச் சீர்திருத்தங்கள், நாட்டின் சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் இந்த மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பைசர் முஸ்தபா PC தெரிவித்தார்.
முக்கிய முன்மொழிவுகள்:
திருமண முறிவு தொடர்பான சட்டச் சீர்திருத்தம்:
திருமண உறவு மீண்டும் சீர்செய்ய முடியாத நிலையை (Irretrievable Breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் இருதரப்பினரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான தெளிவான நடைமுறையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்குகின்றன. இது, நீண்டகாலமாக தொடரும் குடும்பச் சிக்கல்களுக்கு நியாயமான, மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டச் சீர்திருத்தம்:
திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல்
திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல்
தகுதியுள்ள பெண்கள் காதிகளாக பணியாற்றுவதற்கான தடையை நீக்கல்
அனைத்து காதிகளும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தல்
போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்கள், சட்டத்தின் முன் சமத்துவத்தை நிலைநாட்டும் காலோசிதமான தலையீடாகும் என்றும், சமூகத்தில் நிலவும் பழமைவாத நடைமுறைகளை நவீன மனித உரிமை அடிப்படைகளுடன் ஒத்திசைவாக்கும் முயற்சியாகவும் விளங்கும் என பைசர் முஸ்தபா PC சுட்டிக்காட்டினார்.
மேலும், இச்சீர்திருத்தங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளை குறைத்து, குடும்பச் சட்டத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் முக்கியமான கட்டமாக அமையும் என அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

0 comments :
Post a Comment