குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி மற்றும் கோழிறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு பொதுச் சுகாதார நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் (06) இடம்பெற்றது.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், குச்சவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சயோலிபன் கலந்துகொண்டு பொதுச் சுகாதாரம் தொடர்பில் கடை உரிமையாளர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கி வைத்தார்.
கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் கழிவுகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று தெளிவான விளக்கங்களை வழங்கி வைத்த அதேவேளை விலங்கு அறுவை மனையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, குச்சவெளி பிரதேச சபையின் உப அலுவலகங்களாக இயங்குகின்ற நிலாவளி, புல்மோட்டை மற்றும் பிரதான அலுவலக பிரிவுகளுக்குட்பட்ட திண்மக் கழிவகற்றல் முகைமையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு மேற்பார்வை செய்யவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
நிலாவெளிப் பிரதேசம் சுற்றுலாத்துறை பிரதேசமாக காணப்படுவதனால் அப்பிரதேசத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு அழகுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று தவிசாளர் ஏ.முபாரக் வேண்டிக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.மசாஹிர், எச்.வி.சல்மான் பாரீஸ், ஜே.நிமலகாசன், பிரதேச சபை செயலாளர் டபிள்யூ.இந்திரஜீத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வருமான பரிசோதகர்கள், உள்ளூராட்சி அலுவலக ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் மாட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




0 comments :
Post a Comment