பெண்களின் சுயதொழில்முனைவை ஊக்குவிக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக ஸ்கை தமிழ் அமைப்பின் கீழ் செயல்படும் ஸ்கை லங்கா கல்லூரி சார்பில் அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டி கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.
இப்போட்டியின் ஏற்பாடுகளை ஸ்கை லங்கா கல்லூரி முகாமையாளரான ஆஷிகா பர்ஸான் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வு ஆரம்பிக்கும் முன், எல்லே பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியாக மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
போட்டியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியின் தரம், படைப்பாற்றல், கலைநயம் ஆகியவை கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நடுவராக ஹப்ஸா ரிகாஸ் செயல்பட்டார்.
முடிவில் மூன்று சிறந்த வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்:
முதல் இடம் – ரம்லா அப்ஸல் தீன்
இரண்டாம் இடம் – பாத்திமா ஹுஸ்னா ஹுஸைன்
மூன்றாம் இடம் – பாத்திமா மிப்ராஹ் முஆத்
வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகள், வெற்றிச்சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கலைநயத்துடன் செயல்பட்ட போட்டியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் கையளிக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பெண்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளை பாராட்டினர். அதேவேளை ஸ்கை தமிழ் ஊடக உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு நிகழ்விற்கு வண்ணம் சேர்த்தனர்.
இந்த மருதாணிப் போட்டி, பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஓர் அரிய தளமாகவும், சுயதொழில் முயற்சிகளுக்கான ஊக்கமாகவும் அமைந்தது. சமூகத்தில் பெண்களின் பங்கைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவராலும் பாராட்டப்பட்டது.


.jpeg)


.jpeg)

0 comments :
Post a Comment