காதி நீதிமன்றமானது இஸ்லாமியர்களின் விவாக, விவாகரத்து மற்றும் தாபரிப்புகள் சார்ந்த விடயங்களில் மார்க்க ரீதியான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக உண்டாக்கப்பட்டு இலங்கை தாய் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஒரு அங்கமாகும் என மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியதாவது
தற்போது இலங்கையில் காதி நீதிமன்றமானது ஒரு பேசு பொருளாக மாறி இருக்கின்றது.
ஒரு சில காதி நீதிபதிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கவலைகளை கையில் ஏந்திய ஒரு சிலரால் காதி நீதிமன்றம் என்கின்ற கட்டமைப்பு இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தாய் சட்டத்தினால் வழங்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒரு நாடு ஒரு சட்டம் எனும் கோட்பாட்டால் இல்லாமல் செய்தே ஆக வேண்டுமென்று முயற்சிக்கின்ற கடும்போக்கு சிந்தனை வாதிகளுக்கு தீனி போடுவதாக இக்கோரிக்கை அமைகின்றது.
ஒரிரு காதி நீதிபதிகளால் நடந்தேறிய தவறுகளை வைத்துக்கொண்டு அத் தவறுகள் மீண்டும் எதிர்காலத்தில் நிகழாது பாதுகாப்பதற்கான திருத்தங்களை செய்வதற்கு பதிலாக மொத்த காழி நீதிமன்ற பொறிமுறையையும் இல்லாமல் செய்ய முயற்சிப்பது தலைவலிக்கு மருந்து செய்யாமல் தலையை வெட்டி அகற்றுவதற்கு சமனானதாகும்.
இப்படியே ஒவ்வொன்றாக உரிமைகள் பறிக்கப்படுவது முஸ்லீம்களின் இருப்பை எதிர்காலங்களில் கேள்விக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறான நேரத்தில் முஸ்லிம்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு அரசுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது.
எனவே காதி நீதிமன்ற பொறிமுறையை இல்லாமல் செய்வதற்கு பதிலாக அதில் திருத்தங்களை செய்து தொடர்ந்தும் முன் கொண்டு செல்வது இன ரீதியான முரண் பாடுகள் உண்டாவதை தடுக்கும் என முன்மொழிகின்றேன் என இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment