இக் காழி நீதிமன்றம் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் அனுபவித்து வந்த பெரும் சொத்தாகும். இதை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் சகல தரப்பினர் மத்தியில் பெரும் விமர்சனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் குறைகளை களைந்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான ஷரீஆவுக்கு முரணற்ற திருத்தங்களை மேற்கொண்டு காழி நீதிமன்றங்களை வலுப்படுத்த நினைக்காது அடியோடு இல்லாமல் செய்து குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பது மன வேதனையை ஏற்படுத்துவதுடன், இதை இல்லாது ஒழிக்க கோடாரிக் காம்புகளாக செயல்பட்டவர்களையும் அவர்களின் பரம்பரையினரையும் வரலாற்றுத் துரோகிகளாக இந்த முஸ்லிம் சமூகம் பார்க்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாமிய நீதிமன்றமாகிய காழி நீதிமன்றத்தை தூக்கி எறிந்துவிட்டு, மாற்று வழியைத் தேடுவது அல்லாஹ்வின் சட்டத்தில் குறை காண்பதற்கு ஒப்பானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பிரச்சினைக்குத் தீர்வு அதைவிட சிறந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அதனை விட மோசமானதொன்றாக இருக்கக் கூடாது. காழி நீதிவான்களாக செயற்படுபவர்கள் வஹியுடைய அறிவு மற்றும் உலக அறிவு என்பவற்றைக் கற்றறிந்த உலமாக்களும், இறைவனை மறுமையையும் நம்பிய துறைசார் கல்விமான்களுமே.
இந்த இரு சாரார்களும் அப்பிரதேச மக்களுடன் கலந்து நலவுக் கெடுதிகளில் பங்கெடுத்து வாழ்கின்றனர். இவர்களாலேயே தமது மக்களுக்கு முறையான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதுமட்டுமன்றி, காழி நீதிவான்களாக இருப்பவர்களுக்கும் அவரின் ஆதிக்க எல்லைக்குள் இருக்கும் (எமது சமூகத்தின் உயிர் நாடியாக உள்ள) மஸ்ஜிதுக்கும் அப்பிரதேச கிராம உத்தியோகத்தருக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் இருப்பதால் காழி நீதிமன்றத்திற்கு வரும் தம்பதியினர்கள் உண்மையை பொய்யாக்கவும், பொய்யை உண்மையாக்கவும் முடியாது.
இப்படியான காழி நீதிவான்கள் மூலமே முறையான விசாரணை மேற்கொள்ள முடியும். முறையான விசாரணைகள் நடைபெறுவதில்லை என்பதும் Privacy பேணப்படுவதில்லை என்பதும் அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டாகும்.
ஒருசில காழி நீதிமன்றங்களில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் நடந்திருக்கலாம். அதற்காக எல்லா காழி நீதிமன்றங்களையும் பலிக்கடாவாக்க முற்படக் கூடாது.
விவாக, விவகாரத்து விடயங்களில் தீர்ப்பு வழங்குபவருக்கு அதுதொடர்பில் ஷரீஆ சார்ந்த ஆழமான அறிவுள்ளவராகவும், இஸ்லாத்தின் ஏனைய சட்டதிட்டங்களை கற்றவராகவும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விதியாகும்.
இவ்வாறு இருக்க மாவட்ட நீதிமன்றங்களில் இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பை எதிர்பார்க்கவோ அதை நடைமுறைப்படுத்தவோ முடியாது என்பது அதிகமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஆதங்கமாகும்.
எனக்கு இத்துறையில் ( காழி நீதிமன்ற செயற்பாடுகளில்) 15 வருடங்கள் அனுபவம் இருக்கிறது என்ற வகையில், காழி நீதிமன்றங்களில் மிகவும் இலகுவாக எந்த செலவுகளுமின்றி, யாருடைய தேவையும், உதவியுமின்றி ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனியாக வந்து மிக இலகுவாக வழக்குத் தாக்கல் செய்து அதற்கான தீர்ப்பை அல்லது நிவாரணத்தை ஒருசில மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
காழி நீதிமன்ற நடைமுறைகளை காணுகின்ற மாற்று மத சில சகோதரர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் அவர்களது விவாகரத்து விடயங்களில் ஈடுபடுகின்ற போது, பல சிரமங்களை அனுபவிப்பதாகவும் குற்றத்தை ஒப்புவித்துதான் விவாகரத்துப் பெற வேண்டும் என்ற சட்டத்தால் பல குடும்பங்கள் தனது எதிராளியின் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் பிரிந்து வேறு வாழ்க்கையொன்றை அமைத்துக்கொள்ளவும் முடியாமல் பல வருட காலம் நீடிப்பதாகக் கூறி, கவலை அடைவதோடு எமது காழி நீதிமன்ற செயற்பாடுகளை பாராட்டுகின்றனர்.
ஆனால், எம்மில் சிலர் காழி நீதிமன்றத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர். ஒரு பாக்கியத்தின் பெறுமதி அது இழந்த பின்னரே உணர முடியும் என்பார்கள். இன்றுவரை இலட்சக்கணக்கான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தீர்க்கப்படாது நிலுவையிலுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், இலங்கையில் உள்ள எல்லாக் காழி நீதிமன்றங்களில் மொத்தமே கிட்டத்தட்ட 5 ஆயிரம் வழக்குகளே விசாரணையில் உள்ளது. இவை நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்களாகும்.
ஆகவே, மாவட்ட நீதிமன்றத்தின் நிலை இவ்வாறு இருக்க, எந்த நீதிமன்றில் ஆரோக்கியமான முறையான , விசாரணைகள் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது என்பதை எல்லோராலும் தீர்மானிக்க முடியும்.
எமது உரிமையாகிய முன்னோர்களின் சொத்தான காழி நீதிமன்றத்தை இல்லாமல் செய்ய குரல் கொடுப்பவர்கள், முஸ்லிம் தனியார் சட்டமே இந்த நாட்டுக்கு தேவையில்லை என்ற கோரிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் கோரிக்கைக்கும் எதிர்காலத்தில் ஆதரவு கொடுப்பதற்கும் முற்படுவார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இதற்காக காழி நீதிமன்றங்களது செயற்பாடுகள் எல்லாம் சரிகாண இதனை கூறவில்லை. காழி நீதிமன்றங்களிலும் கட்டாயம் சீர்திருத்தப்பட வேண்டிய சில குறைபாடுகள் உள்ளது. அவைகளை சீர்செய்து முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்து சிறந்த காழி நீதிவான்களை உருவாக்கி தரமான காழி நீதிமன்றங்களை உருவாக்க முயற்சிசெய்வோம்.
ஒன்றை இல்லாமல் ஆக்குவதோ, அழிப்பதோ சாதனை அல்ல. மாற்றமாக உருவாக்குவதும், அதனை பாதுகாப்பதுமே சாதனையாகும். உதாரணமாக எமது பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ நோய்வாய்ப்பட்டல் அவர்களை தூக்கி வீசுவது அதற்கான தீர்வல்ல. மாற்றமாக அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கி, அவர்களை குணப்படுத்த முயற்சி செய்வதே அதற்கான சிறந்த தீர்வாகும்.
அஷ்ஷெய்ஹ் என்.அஸ்மீர் (உஸ்வி)
ஜூரி , காழி நீதிமன்றம் - புத்தளம்.
0 comments :
Post a Comment