கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில் சிலர் தொற்றுக்களை பரவச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதிக்குச் செல்லும் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியோரத்தில் இவ்வாறு பயன்படுத்திய கொரோனா பாதுகாப்பு ஆடைகளும், முகக்கவசங்களும் முறையற்ற விதத்தில் வீசப்பட்டுள்ளன.
இதனால் அவ் வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் கூடுதலான கால்நடைகள் மேய்ந்து திரிவதால் ஒருவேளை முகக் கவசங்களிலுள்ள கிருமித் தொற்றுக்கள் கால்நடைகளையும் பாதித்து விடுமோ என்று கால்நடைகள் உரிமையாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.
இவ்வாறு குறித்த இடத்தில் மொத்தமாக முகக் கவசங்களை வீசிச் சென்றுள்ளமை சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி கொரோனா ஆடைகளையும், முகக்கவசங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments :
Post a Comment