நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.-மஹ்தி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொரோனா அனர்த்தம் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டு மீளமுடியாத துயரில் இருக்கின்ற எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க இன,மத, கட்சி பேதங்களை மறந்து, விட்டுக் கொடுப்புகளோடு ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(11) புதன் கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

1ம்,2ம்,3ம் அலைகள் மாத்திரமன்றி 4 ம் கட்ட கொரோனா அலைக்கும் முகம் கொடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலையில் நாட்டின் நிர்வாகம் சீர் குலைந்து போய் இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும்.

அதிகமான தொற்றாளர்கள், 100க்கும் மேற்பட்ட மரணங்கள் என தினம், தினம் பெரும் அதிர்ச்சியான செய்திகளையே ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாக இருக்கின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குதல், பிரதேசங்களை முடக்குதல், பயணத் தடை, தடுப்பூசி ஏற்றுதல், சுகாதார பழக்க வழக்கங்களை பேணுதல் என பல்வேறு கட்ட முயற்சிகளை தொடர்ச்சியாக அரசாங்கம் எடுத்தும் நல்ல பிரதிபலன்களை இன்னும் காண முடியாதுள்ளன.
அதன் காரணமாக கல்வி, பொருளாதாரம், வியாபாரம், விவசாயம், ஏற்றுமதி இறக்குமதி என பல்வேறு துறைகளும் தொடர் பாதிப்புக்குள்ளாகி நாடு வீழ்ச்சியடையும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற கொரோனா பரவலானது புதிய விகாரம் எடுத்து மீண்டும் பரவுகின்றது என்றால் இங்கே அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் போலியானதா? அல்லது சிறப்பான திட்டமிடல் இல்லாதவையா? அல்லது நாட்டில் அநீதியும் அநியாயங்களும் உச்சத்தை தொட்டமையினால் ஏற்பட்ட இறை சாபமா? என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.
மருத்துவ நிபுணர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என பல்வேறு தரப்பை சார்ந்தவர்களால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப் படுகின்ற போது அவற்றுக்கு மதிப்பளிக்காது உதாசீனம் செய்யப்படுவதான குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப் படுகின்றது.
அதே நேரம் சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதித்தல், தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர தவறுகின்றமை, வைத்திய சாலை நெருக்கடிகள் தீர்க்கப் படாமை போன்ற செயற்பாடுகள் இவ்வாறான துர்பாக்கிய நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றன என்ற விமர்சனங்களும் முன்வைக்கப் படுகின்றன.

அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை என்பவற்றின் காரணமாக பாரிய பொருளாதார பின்னடைவுகளுக்கும் முகம் கொடுக்கக் கூடிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தமையை தொடர்ந்து வாகன இறக்குமதி, சமையல் எரிவாயு, பால்மா இறக்குமதி, விவசாய உற்பத்திக்கான மூலப் பொருட்கள் இறக்குமதி, என ஒவ்வொன்றாக இறக்குமதித் தடைகளும் தொடருகின்றன. இந்த இறக்குமதி தடையானது எரிபொருட்கள் இறக்குமதித் தடை, மருந்துப் பொருட்கள் இறக்குமதித் தடை என தொடர்ந்தும் நீண்டு சென்று விடலாம் என்ற அச்சத்தையும் மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

பாரிய கடன் சுமை, மீளச் செலுத்த முடியாத கடன்கள், புதிய கடன்கள் பெறுதல் என பல்வேறு சுமைகளும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நாட்டை கட்டியெழுப்புவதில் பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்புகளை செய்யும் விவசாய துறையானது இந்த இரசாயன பசளை, மற்றும் நாசினிகள் இறக்குமதிகள் நிறுத்தப் படுவதனால் ஏற்படப் போகும் மிகப்பெரும் பொருளாதார இழப்புகளை சந்திப்பதற்கு இடமளித்து விடக் கூடாது.

இன்னும் ஒரு மாத காலத்தில் மிகப் பாரதூரமான விளைவுகளை இந்நாடு எதிர்கொள்ள வேண்டிவரலாம் என்ற சுகாதார துறை சார்ந்தவர்களின் எதிர்வு கூறல்களை தட்டிக் கழிக்காது கவனத்திலெடுத்து உரிய முற்காப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் இன, மத,கட்சி பேதங்களுக்கு அப்பால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதோடு இன் நாட்டையும் இந்நாட்டு மக்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :