20வது அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கமைய ஜனாதிபதியினால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில்:-
சர்வதிகார செயற்பாடுகளை தடுப்பதற்காகவே 19வது அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்பட்டது. 19வது திருத்தத்தை நீக்குவதால் மீண்டும் அந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கும். தனி நபரொருவரிடத்தில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் 19வது திருத்தத்தின் ஊடாக பாரளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் கூறுவதைப் போன்று தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்காக மக்களின் உரிமைகளை நீக்க முயற்சிப்பது ஜனநாயக கொள்கைமிக்க செயற்பாடு கிடையாது.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டமூலம் 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி அடிப்படை உரிமை மீறல்களை செய்தால் இவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்யமுடியும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அதனை 20வது திருத்தத்தில் மாற்ற முயற்சித்துள்ளனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்.
19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்த அரசியலமைப்பு பேரவையை நீக்கி பாரளுமன்ற பேரவையை ஸ்தாபிக்கவும் எண்ணியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாரளுமன்ற பேரவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பாரளுமன்ற உறுப்பினர்களாக விளங்குவதுடன், இதற்கு சிவில் உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்பட மாட்டார்கள்.
இதேவேளை லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான ஆணைக்குழு நீக்கப்பட்டுள்ளதாக புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான நியமனத்தை ஜனாதிபதி வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இல்லாத ஆணைக்குழு ஒன்றுக்கு எவ்வாறு ஜனாதிபதி நியமனம் வழங்குவார்?
உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசரை நியமிக்கும் பொறுப்பும் ஜனாதிபதிக்கே ஒப்படைக்கப்படவுள்ளது. அமைச்சரவை நியமனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி விரும்பினால் 150 பேருக்கும் அமைச்சுகளை கூட அவரால் நிமிக்க முடியும். ஏன் இதனை மாற்றினார்கள்.
அமைச்சுகளின் குறைப்பு என்ற விடயத்துக்கு நாட்டு மக்களும் ஆதரவளித்திருந்தனர் அல்லவா. இதேவேளை ஆளும் தரப்பினர் தங்களது ஆட்சியில் செலவுகளை குறைப்பதாக தெரிவித்திருந்தனர். அமைச்சுகளை அதிகரிப்பதினால் செலவுகளை குறைக்க முடியுமா?
ஜனாதிபதி விரும்பினால் அமைச்சர்கள் அல்லது ராஜாங்க அமைச்சர்கள் பிரதமரை பதவியிலிருந்து விலக்க முடியும். பாரளுமன்றத்தின்கான பொது செயலாளர் நியமனத்தையும் ஜனாதிபதியே வழங்க முடியும். இந்நிலையில் ஒரு வருடத்தில் ஜனாதிபதியால் பாரளுமன்றத்தை கலைக்கவும் முடியும்.
மக்களின் விருப்பத்தின் பேரிலே ஜனாதிபதி மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுச் செய்யப்படுகின்றார்கள். இந்நிலையில் ஜனாதிபதியால் மாத்திரம் எப்படி மக்கள் வழங்கிய தீர்மானத்திற்கு புறம்பாக ஒரு வருடத்தில் பாரளுமன்றத்தை கலைக்க முடியும்.
அவசரகாலச் சட்டத்தை கொண்டுவருவதென்றால் வர்த்தமானியில் அறிவித்ததன் பின்னர் 2 வாரம் கழித்தே அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்ற சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவவேற்றப்பட்டதற்கு காரணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவரது ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த 18வது அரசியலமைப்பு திருத்தத்தை இந்த அவசரகால சட்டத்தின் ஊடாகவே கொண்டுவந்தார்.
அதனால் அதனை மீள்பரிசோதனை செய்யவோ தெளிவுப் பெறுவதற்கோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதனால் தான் 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதனையும் இல்லாமலாக்க முயற்சித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகத்தில் இடம்பெறும் செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு அதிகாரிகள் பரிசீலனை செய்ய முடியாது என்ற விடயமும் 20வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment