ஐக்கிய மக்கள் சக்தியினால் சிறுபான்மை கட்சிகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வழங்கப்பட வேண்டிய தேசிய பட்டியல் விவகார சிக்க நிலை இப்போது உச்சம் தொட்டு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (5+1 ஆசனங்கள்), தமிழர் முற்போக்கு கூட்டணி (6 ஆசனங்கள்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (4 ஆசனங்கள்) ஆகிய சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் பங்கிட்டு வழங்குவதில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தடிப்படையில் வாக்குறுதி வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவுடன் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவுற்றிருந்ததுடன் இதுசம்பந்தமாக மேலதிக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், த.மு.கூ ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய சிறுபான்மை கட்சிகளின் சகல எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐ.ம.ச தலைமையகத்தில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் திங்கட்கிழமை வரை ஐக்கிய மக்கள் சக்திக்கு காலக்கெடு கொடுத்துள்ளதாகவும் தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment