இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு - தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இரங்கல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு செய்து அதிர்ச்சியை தருகிறது. இவரது இழப்பானது மலையக மக்களுக்கு பேரிழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு புதிய தலைமை வகித்து அமைச்சுப் பதவிகள் பெற்று மலையக மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கும் எனக்கும் இடையில் இருந்தபோதும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருந்ததில்லை. அதனால் அவரது மறைவு கவலை அளிக்கிறது. அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஆறுமுகன் தொண்டமானின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாரும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மலையக மக்களுக்கு தலைமை கொடுத்த தலைவர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மலையக மக்கள் கட்சி பேதமன்றி துயரில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.