மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்காக குதித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து,பொலிஸ் உத்தியோகத்தர் காந்தரூபன் ஆகியோருக்கு தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சேபால பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்.
21ம் திகதி தற்கொலை செய்து கொள்ள கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்ணை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவான் பெர்னாந்து அவரோடு பொலிஸ் உத்தியோகத்தர் காந்தரூபன் ஆகியோர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றினர். உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் குதித்து போராடினார்.
இந்நிலையில் இருவரும் நீர்த்தேக்கத்தில் தத்தளித்தபோது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் உத்தியோகத்தரும் நீர்த்தேக்கத்தில் குதித்து இருவரையும் மீட்க முற்பட்டபோது தெய்வாதீனமாக பெண் மாத்திரமே உயிரோடு மீட்கப்பட்டதுடன் அவரை காப்பாற்ற குதித்தவர் பல மணித்தியால போராட்டத்தின் பின் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் அசோக சேபாலவினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.