அக்கரப்பத்தனை டொரிங்டன் கல்மதுரை தோட்டத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் தொடர் லயன் குடியிருப்பொன்றின் நிலம் தாழிறங்கியமையினால் அக்குடியிருப்புகளில் வசித்த 11 குடும்பங்களைச் மக்கள் தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு கட்டட ஆராய்ச்சி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய சம்ப இடத்திற்கு சென்ற இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் விடயங்களை அறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களை அத்தோட்ட உத்தியோகத்தர் விடுதி ஒன்றில் பாதுகாப்பாக குடியமர்த்தியுள்ளார்.
அக்குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். இவர்களுக்கான குடியேற்றங்களை அமைத்துக் கொடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.