ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 25% சம்பளத்தை வழங்காது சில பெருந்தோட்டக் கம்பனிகள் இழுத்தடிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று பெருந்தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் சேவையாளர்கள் தங்களது சம்பள உயர்வை கோரி வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தததின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படுவது போல தோட்ட சேவையாளர்களுக்கும் ஒப்பந்தம் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் இம்முறை 25% சம்பள அதிகரிப்புக்கு பெருந்தோட்ட கம்பனிகள் கையொப்பம் இட்டுள்ளன. இந்நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் சில கம்பனிகள் தங்களது சேவையாளர்களுக்கான 25% சம்பள உயர்வை ஊழியர் சேமலாப நிதியுடன் வழங்கியுள்ளன. எனினும் சில கம்பனிகள் அதனை வழங்காது இழுத்தடிப்பு செய்வதுடன் ஊழியர் சேமலாப நிதி அல்லாமல் குறித்த சம்பள உயர்வை பகுதி பகுதியாக வழங்கவும் முயற்சித்து வருகின்றன.
இதனால் பாதிப்படைந்துள்ள பெருந்தோட்ட சேவையாளர்கள் மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமும் அவர்களது கோரிக்கையும் மிகவும் நியாயமானதே. எனவே 25% சம்பள உயர்வை இதுவரை வழங்காத கம்பனிகள் உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் கேட்டடுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் குறித்த கம்பனிகளது உயர்பீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.