நயம் என்பதன் பொருள் ஒரு செயலை செய்வதில் உள்ள செய் நேர்த்தியை, சிறப்பான அதன் பக்கத்தை அடையாளம் காணல் ஆகும்..
கவிதை என்றால் என்ன என்று யாராலும் சொல்லி விட முடியாது. 'இதுதான் சிறந்த கவிதை' என்று ஒன்றைக் குறிப்பாகச் சொல்ல முடியும். ஆனால் எது நல்ல கவிதை என்பதை சொல்லுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல எனப் பேராசிரியர் வையாபுரி பிள்ளை கூறுவார்.
கவிதை என்பது என்ன என்பதற்கு திட்டமான வரையறைகள் கிடையாது. அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப / யானை பற்றி விளக்கிய அந்தகர்கள் போல் கவிதைகளுக்கும் வரைவிலக்கணம் தர முயன்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த 'கவிதை ' என்ற வடிவத்தை இலக்கியத்தின் அரசி எனக் கூறுவதுண்டு.
தாகூர் என்ற மகாகவியின் கவிதை இது.
புல்லின் மீதான
பனித்துளிகளைத்
தாவித்தாவி காவல் காக்கின்றன
வெட்டுக்கிளிகள்
இப்படி ஒரு சின்னச் சிமிழுக்குள் மாபெரும் விபரிப்புகளை,அர்த்தங்களை, பரிமாணங்களை அந்த வடிவம் கொண்டிருப்பதால்தான் இலக்கியத்தின் அரசியாக கவிதை திகழ்கின்றது.
புதுமைப்பித்தன் கவிதை என்பதை ஒரு மோகனமான கனவு எனக் குறிப்பிடுவார்.
Poetry is an echo, asking a shadow to dance.
கவிதை, ஒரு 'நிழல் '.'எதிரொலியை' அது ஆடச் சொல்லிக் கேட்கின்றது ' என்று கார்ல் சாண்ட்பர்க்[– Carl Sandburg] என்பவர் சொல்லுகிறார். எதிரொலிக்கும் உருவம் கிடையாது நிழலுக்கும் உருவம் கிடையாது என்ற உண்மையை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒலி -ஒளியில் தோய்ந்து 'குரலாகி' இருக்கும் இந்த இறுவட்டின் கவிதைகள் வெகுஜன ரசனைக்கானது.
வெகு ஜனரசனை என்றும் தீவிர ரசனை என்றும் நாம் அடிக்கடி கூறி வருகின்றோம்..ரசனை என்ற சொல் /ரசித்தல் என்பதன் அடியாக வந்த ஒரு சொல். ரசித்தலின் தன்மையை ,ரசிக்கப் படும் பாங்கை ,ரசிக்கப் படும் விஷயத்தை ரசனை என்ற சொல் குறிக்கின்றது.
இந்த ரசனை என்பது ஆளுக்காள் வேறு படுகின்றது. சிலருக்கு கர்நாடக இசை பிடிக்கும். சிலருக்கு மெல்லிசை பிடிக்கும். சிலருக்கு அதிரடி சண்டைகளும், பாலுறவுக் காட்சிகளும் நிறைந்த சினிமா பிடிக்கும். சிலருக்கு சோகமும், காதலும் இழைந்தோடும் திரைப்படங்கள் பிடிக்கும்.ஒரு மனிதனின் ரசனை என்பது தொட்டிற் பருவத்திலேயே தொடங்கி விடும் ஒன்றல்ல.மெல்ல ,மெல்ல வெல்லக் கரைசலில் விளையும் பளிங்கினைப் போல அவனுடைய ரசனைகள் உள்ளத்தில் படிகின்றன.
ஒரு புறம் நம்முடைய பழங் காலத்தில் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கிய உயர் குழாம் ஒன்று classics எனப் படும் செவ்வியல் கலைகளை ஒரு புறம் போஷிக்க
மறுபுறம் கல்வி ,கேள்விகளில் குறைந்த அல்லது பின் தங்கிய கொத்தடிமை , கூலி மக்களின் கலை வடிவங்கள் வேறு ரூபத்தில் இருந்தன. நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள், பாணர் ,விறலியர் கூத்துகள் ,நாட்டுக் கூத்துகள், தெருக் கூத்துகள் ,இவற்றோடு பின்னிப் பிணைந்த நாட்டாரிசை என்பவை
இந்த சாமானிய மக்களின் கலை வடிவங்களாக அடையாளம் காணப் பட்டன.
காலப் போக்கில் தமிழ் கூறும் நல்லுலகத்தின் -கலை-இலக்கிய உணர்வுப் பலகணிகள் மேற்குத் திசை நோக்கி திறந்து விடுபடத் தொடங்கின.புதிய கலை-இலக்கிய வடிவங்கள் தமிழில் நுழைந்தன.சிறுகதை, நாவல்,சினிமா, புதுக் கவிதை என்பவை முக்கியமாகவும் நவீன ஓவியம் ,நாடகம் என்பன அருகலாகவும் இங்கே பிரவேசித்தன.
குறிப்பாக பழைய நாட்டார் கலைகளின் இடத்தை சினிமா கைப் பற்றிக் கொண்டது.கலை-இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழும் விதிவிலக்கல்ல, இன்னொரு விதத்தில் சொன்னால் கலை-இலக்கியப் படைப்புகளை காட்சி ரூபத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒரு பரந்த சந்தையை உருவாக்க முனைந்தது. ஒரு வாசகனின் அல்லது ரசிகனின் அறி திறனுக்கு அதிக வேலை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளப் பார்த்தது.
மகா கவி பாரதியின் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை சாமானியன் ஒருவன் படித்தறியும் வாய்ப்புகள் அரிது.ஆனால் அவர்களை அவன் அதிகமாகவும் அறிந்து வைத்திருப்பது திரை இசைப் பாடல்களாகவும், ,தனிப் பாடல்களாகவும் ஆக்கப் பட்ட அவர்களுடைய கவிதைகள் மூலம் என்பதை நாம் இங்கே ஞாபகம் கொள்ள வேண்டும்.
ஓலை வடிவத்திலிருந்தவை ,காகிதத்துக்கு இடம் மாறியதும், காகிதத்திலிருந்து, இணையத்துக்கும்/ இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நகர்ந்ததும் நவீன யுகத்தின் தவிர்க்க முடியாத விளைவுகள் ஆகும்.
தமிழ் கவிதை வரலாற்றில் சீரான ஓசை என்பது ஆட்சி புரிந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அது படிப் படியாக தன் தளைகளை உதறிக் கொண்டு சுதந்திரமான ,எளிமையான உருவத்துக்கு வந்து சேர்ந்தது.
நல்ல கவிதை என்பது மனதில் காட்சிகளை உருவாக்கிச் செல்ல வேண்டும்.. இதை ஆங்கிலத்தில் immage என்று கூறுவார்கள்.
மரபுக் கவிதையானாலும் சரி, புதுக் கவிதையானாலும் சரி அப்படிப் பட்ட அக உலகத்து சித்திரங்களை உருவாக்கிக் கொண்டுதான் நாங்கள் கவிதைகள் பயின்றோம் .
கவிதைகளுக்கும் ,காட்சிகளுக்கும் என்றுமே தொடர்புண்டு. எந்தவோர் இலக்கியப் படைப்பும் வெறும் எழுத்துகளாலும் ,சொற்களாலும் மாத்திரம் உருவாகின்றவை அல்ல. சொற்கள் உருவாக்கும் உணர்வுகள் , மனக் காட்சிகள் ,அகச் சித்திரங்கள்தான் கவிதைக்கு உயிரூட்டுகின்றன. அவற்றின்
பின்னால் ஒர் உலகமும் ,அதன் காட்சிகளும் ஒளிந்திருக்கின்றன.
ஓர் தேர்ந்த வாசகன் தன் மனக்கண் வழியாக அந்த உலகத்தையோ அல்லது சூனியத்தையோ தரிசிக்க வேண்டியிருக்கிறது. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ' தெய்வம் என்றால் அது தெய்வம்...வெறும் சிலையென்றால் அது சிலைதான்'
குறுந் தொகையில் ஒரு பாடல் .
'யாயு ஞாயும் யார் ஆகியரோ ?
எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புல பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவோ ?'
இதன் பொருள்
உன்னுடைய தாயும், என்னுடைய தாயும் யாரென்றறியோம் .உன்னுடைய தந்தைக்கும்,என்னுடைய தந்தைக்கும் என்ன உறவு? நமக்குள் முன்னர் எவ்வழியிலும் அறிமுகமில்லை. ஆனால் பாலை நிலத்தில்
பெய்த மழை நீர் போல் நம் அன்பு நிறைந்த நெஞ்சங்கள் கலந்து விட்டன.
இதில் இடம்பெறும் 'பாலை நிலத்தில் பெய்த மழையைக் ' கற்பனை பண்ணி ஒரு சித்திரத்தை அல்லது காட்சியை உருவாக்கிக் கொள்வதில்தான் ஒரு வாசகனின் தேர்ச்சி இருக்கின்றது.
கம்பராமாயணத்தில், பாலகாண்டத்தில் இராமன், தன் சகோதரர்களுடன் நகரத்து வீதியில் வரும் போது அவர்களைப் பார்க்க இளம்பெண்கள் பல இடங்களிலும் கூடுகின்றனர்.
கம்பன் உருவாக்கும் காட்சி இது.
'மானினம் வருவ போன்றும் , மயிலினம் திரிவ போன்றும்
மீனினம் மிளிர வானில் , மின்னினம் மிடைவ போன்றும்
தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்ப எங்கும்
பூனனை கூந்தன் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் .'
அங்கு கூடிய பெண்கள் மான் கூட்டம் வருவது போலவும் ,மயில் கூட்டம் திரிவது போலவும், விண் மீன்கள் மிளிர்வது போன்றும், தங்கள் கூந்தல்கள் அவிழ்ந்து போவதையும் பொருட் படுத்தாதவர்களாக தேன் வண்டுகள் போல் அங்கே மொய்த்தனர் என்பது கம்பன் உருவாக்கிய காட்சி.
சற்று அண்மைக் காலத்துக்கு வருவோம்.
கவிஞர் நீலாவணனின் ஓர் அழகிய கவிதையிலிருந்து சில வரிகள்.
மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவிலை ...இளம்
தென்னையின் ஓலை பண்ணிய
இன்பப் பாட்டுகள் ஓயவிலை
என் கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய
ஈரம் காயவிலை -எழில்
மின்னிடும் என்றன் மென்முலை தானும்
பின்னே சாயவிலை ....
குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த
சுவடும் மாறவிலை -அங்கு
பிறவுகள் வந்து குறுநடை கொண்டு
கோலம் கீறவிலை ...
இப்படி... காட்சிகளை நம் மனங்களில் விரித்துச் சென்ற எவ்வளவோ கவிதைகள் இருக்கின்றன..நாம் காட்சிகளை உருவகித்து வரிகளின் சாலையிலே நடந்த காலம் என்று ஒன்றிருந்தது. இப்போதும் இருக்கிறது.
ஆனால் அகக் காட்சிகளுக்கு எல்லாம் இடம் வைக்காமல் இந்த நவீன யுகத்தில் அன்புத் தம்பி ஜனூஸ் இப்போது இன்னொரு வாசலைத் திறந்து வைத்து கண் வழியாகவும் ,செவி மூலமாகவும் கவிதைகளைப் பரிமாற முனைகின்றார்.
கவிதைகளின் தொகுப்பை அச்சு வடிவில் புத்தகமாக நாங்கள் பார்த்திருக்கிறோம். பின்னொரு காலத்தில் கவிஞனின் குரலில் / இறுவட்டு வடிவில் கவிதைகளைக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் தம்பி ஜனூஸ் அவர்களின் 'குரலாகி' என்ற இந்தக் கவிதை இறுவட்டு /காணொளி -ஒலி - என இரண்டையும் ஒருங்கே கொண்டிருப்பதால் அதற்கு ஒரு வரலாற்றுப் புகழ் கிட்டுகின்றது.
ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழ் கூறு நல்லுலகிலேயே ஒருவர் தன் கவிதைகளைப் பண்பட்ட பல குரல்கள் வழியாகவும் , தேர்ந்தெடுத்த பொருத்தமான காட்சிகளின் வாயிலாகவும் வெளிப்படுத்தும் முதல் இறுவட்டு இது என எண்ணுகிறேன்.
அந்த வகையில் இந்த இறுவட்டுக்கு முப்பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று இதில் உள்ளடக்கப் பட்டிருக்கும் கவிதைகள்.மற்றையது இந்தக் கவிதைகளுக்கு குரல்கள் வழங்கும் உயிர்த் துடிப்பு .
மூன்றாவது, கவிதை ரசனைக்குப் பக்க பலமாக, சமாந்தரமாக தோன்றுகின்ற காட்சிகள்.இந்த மூன்று அம்சங்களையும் நாம் கணக்கில் இங்கே எடுக்க வேண்டி உள்ளது.
இந்த இறுவட்டில் மொத்தம் 35 கவிதைகள் உள்ளன. 21 குரல்கள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.
இதில் இடம் பெற்றிருக்கும் ஜனூஸின் கவிதைகளின் உள்ளடக்கங்களை ஒரு வசதி கருதி 11 பிரிவுகளின் கீழ் அடக்கி விடலாம். இயற்கை அனர்த்தங்களின் பேரவலம், நாட்டார் பாடல் பாணியில் வட்டார வழக்கில் வெளிப்படும் காதல், நவீன மயமாக்கல் தவிர்க்க இயலாத படி நம் வேர்களை அசைத்துச் செல்வது பற்றிய ஆதங்கம் , சகிப்புத் தன்மையற்ற அரசியலுக்கு எதிரான பார்வை,
மானிடத்தின் இழிநிலை குறித்த வெப்புசாரம் , இயற்கையின் கொடைகள் மீதான லயிப்பு, கனவுக்கும் நடைமுறை வாழ்க்கைக்குமான இடைவெளி குறித்த பெருமூச்சு, கை நழுவிய காதல்கள் மீதான பிரிவேக்கங்கள் , மனதில் பதிந்த அல்லது மனதைப் பாதித்த மாந்தர்கள் , படைப்பு மனோநிலையின் எழுச்சியில் பிறந்த தன்னுணர்வுக் கவிதைகள் , இளம்பராயத்து மீள் நினைவுகள் என்பவை அவை.
நிலாத் தெறிக்கும் குருத்துமணல் ,கள்ளப் பட்ட காற்று,கபடமில்லாத அணிலாகிய நான் ,நெட்டி முறித்த நிலா,மூசாப்பும் ஒருமுழ வெயிலும் ,ஒரு தும்பியின் மனம் பறித்து ,காற்றலைத் தோப்புக் குயில் ,முகத்தைக் கழுவிக் காயப் போடு ஆகிய கவிதைத் தலைப்புகள் கொண்டிருக்கும் வசீகரம் வாசிக்கும் ஆர்வத்தைத் நமக்குள் தூண்டுகின்றன. ஜனூஸின் இன்னோர் சிறப்பம்சம் அவருடைய கவிதைகளில் பரவலாகத் தென் படும் தென்கிழக்கின் வட்டார வழக்குச் சொற்கள் .
அவருடைய கவிதையொன்றில் பெத்தா ஒருத்தி வருகின்றாள். அறிவிப்பாளனாக இருக்கும் தன் பேரனின் குரலை வானொலி வழியாகக் கேட்டு கொடுப்புக்குள் சிரிக்கின்றாள். ஒரு கட்டத்தில் வானொலியில் ஒலிக்கும் ஆண் குரல்கள் எல்லாமே தன் பேரனின் குரலாகவே அவளுக்குத் தென் படுகின்றது. ஓர் அருமையான சிறுகதை இந்தக் கவிதைக்குள் மடித்து வைக்கப் பட்டிருக்கிறது. என்னுடைய 17 வயதை மீள் ஞாபகப் படுத்திய கவிதை இது. மனித உறவுகள் ,நட்புகள் என்பவை வெறும் நாடகக் காட்சிகள் போல் ஆகின்ற இந்த அவசர யுகத்தில் இந்தக் கட்டத்தில் மனித புராணத்தின் இத்தகைய மேன்மையான அத்தியாயங்கள் சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.
ஒரு கலை-இலக்கிய வாதிக்குத் தேவையான நுட்பமான அவதானிப்பும் ,அழகியல் அம்சங்களும் ஜனூஸிடம் இருக்கின்றன என்பதற்கு அவருடைய கவிதைகளிலுள்ள சில வரிகளே எடுத்துக் காட்டுகள் ஆகின்றன.
குழந்தை உலகம் என்றொரு கவிதையின் வரிகள் இவை.குழந்தைகளின் குதூகலத்துக்காக அன்னையும் ,பிதாவும் குழந்தைகளாக மாறுவதை விபரிக்கும் கவிதை இது.
'குதிரையாகி பிள்ளையை முதுகில் சவாரி செய்திடலும்
பிள்ளை சிரிப்பான் என பலூன் பீப்பீ ஊதுதலும்
பிள்ளையின் தேசத்தில் நான் கோமாளி ஆகுதலும்
இன்னும் பிறவும் இதற்காகத்தான் ....'
மறைந்து போன பெத்தாவின் நினைவாக ஜனூஸின் ஒரு கவிதை. கவிதையின் அழகான முத்தாய்ப்பு இது.
'..என் வீட்டைக் கடந்து செல்கின்ற
நிலாவின் முகங்களில்
உனது சூரத்து முகம் பார்த்துக் கொள்கிறேன்
பெத்தா ,நீ குருத்து மணல் மனசுக்காரி ..'
இன்னுமோர் அழகிய கவிதை 'நெட்டி முறித்த நிலா'. அதில் நான் லயித்த வரிகள் இவை.
அன்னா ...இன்னா ..
அறுந்து விழும் சாடை.
நிலாப் பழம்
நடுக் கடலில் தொங்குகிறது
கடலுக்கு வீணி வடிகின்றது
அது அறுந்து விழத்தான் போகிறது
நிலாப் பழத்தின் நெட்டியிலிருந்து
சொட்டுப்பால் கசிகிறது
இனி என்ன
வீணி வடிந்த கடலுக்கு நுரை தள்ளும்
ஜனூஸ் சூறாவளியை விபரிக்கும் பாங்கே தனி. அவர் இவ்வாறு கூறுகின்றார் .
'தலை மயிர் பிய்த்து எறிகின்ற கணக்கில்
காற்றுக்குத் தலை விறைத்து விட்டது
காற்றின் முதுகில்
'கெற்றப் புள்ளால் ' தெறித்தவர் யார் ?'
கோடையின் கொடு வெயில் தாளாமல் ஜனூஸ் இவ்வாறு கேட்கின்றார்.
'வானத்தில் ஓட்டைதான் வீழாதா ?
கறுத்த மேகங்கள் காறித் துப்பாதா ?
'ஒரு தும்பியின் மனம் பறித்து ' என்றொரு கவிதை. அதில் கவிஞர் கூறுகின்றார்...
'..கோழி தீச்ச குறுணலாய்
கோதாரி கோடுகள் பல கீறி
அங்கொன்றும் ,இங்கொன்றுமாய்
கோலங் குறைந்து கிடக்கின்ற மனசை
அடிக்கடி கோபித்துக் கொள்ளுகிறேன்...
தறுதலையாய்
தறி கெட்டலையும் மனசுப் பிள்ளையை
கிணற்றடி துலாக்காலில் கட்டி வச்சு
மயிர் மட்டையால் வெளுக்கணும்
ஒரு தும்பியின் மனதை
துலாக் காலில் கட்டி வைத்து ..
இவையெல்லாம் ஜனூஸிடமிருந்து பளிச்சிடும் கவிதை வரிகள் .
இந்த இறுவட்டின் மிகச் சிறந்த கவிதைகளாக , முக்கியமானவைகளாக ,துருத்தல்கள் அற்றவையாக ஆறு கவிதைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1.கள்ளப் பட்ட காற்று 2.நெட்டி முறித்த நிலா 3.மரணபயம் மரணமாகி 4.ஒரு தும்பியின் மனம் பறித்து 5.முகத்தைக் கழுவி ,காயப் போடு 6.கால் மணி நேரக் கனவு ...ஆகியவை.
ஒன்றை நோக்கி இட்டுக் கட்டுதல் ,மிகை விபரிப்பு இன்றி இயல்பான மன உந்துதலுடன் இந்தக் கவிதைகள் பிறந்திருகின்றன. இந்தக் கிளை வழியே ஏறிச் சென்றால் ஜனூஸ் பெருமைக்குரிய உயரங்களை எட்டுவார் என்பதில் ஐயமில்லை.
இந்த இறு வட்டின் இன்னொரு முக்கிய அம்சம் இதில் பயன் படுத்தப் பட்டிருக்கும் பண்பட்ட குரல்கள்,மற்றும் ஒலிச் சேர்க்கைகள்.
மிகவும் அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் குரல் வழியாக இந்தக் கவிதைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் சம்பந்தப் பட்டவர்கள்..பொதுவாக இலங்கையின் கிழக்கு நில மாந்தர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாடகீயத் தன்மை வெளிப் படுவதுண்டு. ஏற்ற -இறக்கங்களுடனும் ,இழுவையுடனும் ,உடல் உறுப்புகளின் அசைவுகளுடனும் கூடிய உரையாடல் அது. இந்த இறுவட்டின் கவிதைகள் பலவற்றிலும் அந்தத் தன்மை பிரதிபலிக்கின்றது.. இந்த இறுவட்டின் கவிதைகளை / ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்லும் ஓர் எஞ்சினின் பணியை ஒத்த மகத்தான செயலை இந்தக் குரல்கள் செய்திருக்கின்றன. மாடு போல முட்டுதுகா , என்ன இல்லை கிழக்கில, நெட்டி முறித்த நிலா ஆகியவை சிறந்த உதாரணங்கள்.
கவிதைகளின் பின்னணியில் ஒலிக்கும் இனிய மெல்லிய இசையும் , ஓசைகளும் கவிதைகளுக்கு குறிப்பிடத் தக்க பரிமாணங்களை வழங்குகின்றன.
மழைக் கவிதை வாசிப்பின் போது ,பெய்யெனப் பெய்யுமாம் மழை என்பது போல மழையோசை கேட்கின்றது. ரயில் கவிதை வரும் போது ரயிலோசை தட தடத்து விரைகின்றது. சுனாமி அனர்த்தத்தின் பேரவல நினைவுகளைத் தாங்கிய கவிதைகளின் போது அலை ஓசை நம் மனத்தைக் கரைக்கின்றது. காற்று இன்னொரு கவிதையில் சுழன்றடிக்கின்றது.
விதம் விதமான குரல்கள். விதம் விதமான ஓசைகள்.
இந்த இறுவட்டின் இன்னொரு கவர்சிகரமான அம்சம் அது கொண்டிருக்கும் காட்சிகள். ஏற்கனவே சேகரிப்பில் இருக்கும் காட்சிகளிருந்து பொருத்தமான காட்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது வெளிப்பார்வைக்கு லேசாகத் தெரியலாம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் தேடலும் ,கடினமான உழைப்பும் அபரிமிதமானது.
இந்த இறுவட்டை வெளிக் கொணர்வதில் /இதனுடன் சம்பந்தப் பட்ட எல்லாவற்றையும், எல்லோரையும் ஒருங்கிணைப்பதில் ஜனூஸ் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்கியிருப்பார் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகின்றது. கலைப் பித்து என்பது ஒருவரை எப்படியெல்லாம ஆட்டுவிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.
ஒருவருடைய கலை-இலக்கிய முயற்சியைப் பற்றி மிகவும் எளிதாக நாம் விமர்சித்து விடலாம். குற்றம் குறை கண்டு பிடித்து விடலாம். ஆனால் அந்த முயற்சியை நம்மால் செய்து காட்ட முடியுமா என்றொரு கேள்வியை அதற்கு முன் நம்மை நோக்கி நாம் அவசியம் கேட்க வேண்டும்..
இங்கேயுள்ள பெரும் பாலான கலை -இலக்கியவாதிகள் சந்திக்கும் பிரச்சினை தங்கள் படைப்புகளைத் தாங்களே வியாபாரமும், விநியோகமும் செய்ய வேண்டியிருப்பது ஆகும்.
அவர்களுக்கு தங்களின் நேசக்கரங்களை நீட்டி ஆதரவு அளிக்க வேண்டியது வாசகர்கள் ,ரசிகர்களின் கடமை.
இதை ஓர் ஆரம்பப் புள்ளியாக ,அடிப்படையாகக் கொண்டு ஜனூஸ் அவர்கள் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும்.
குரலாகி கவிதை இறுவட்டின் ஆசிரியர் எஸ்.ஜனூஸ் அவர்களுடனான தொடர்புகளுக்கு 0766610565 0716642992
.jpg)
0 comments :
Post a Comment