அட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அட்டன் பகுதியில் அட்டன் பிரபல விடுதியொன்றில் முகநூல் மூலம் ஒழுங்கு செய்திருந்த விருந்துபசாரத்தில் ஒருகிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சா மற்றும் கொக்கேயின் போதை மாத்திரைகள் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (07.09.219) இரவு மீட்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின் அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டதாகவும் அட்டன கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பிலியந்தலை, பாணந்துறை , கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார.
குறித்த விருந்துபசாரத்தினை; கண்டி மற்றும் நோர்வூட் தியசிறிகம வைச் சேர்ந்த இருவர் முகநூல் முலம் ஒழுங்குசெய்துள்ளனர். குறித்த விருந்துபசாரத்திற்கு நாடெங்கிலும் இருந்து 400 வரையிலான இளைஞர் யுவதிகள் உட்பட அவர்களின் ஒருசில பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்த அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடியவர்களை சோதனை செய்துள்ளனர்.
அதன்போது அவர்களில் நால்வரிடமிருந்து சிறிய அளவிலான கொக்கேயின் போதை மாத்திரைகள் , கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து சோதனை செய்த அதிகாரிகள் ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை விருந்துபசார பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.
நாடெங்கிலும் முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்படும் விருந்துபசாரங்களில் இளைஞர் யுவதிகள் போதை வஸ்து பயன்படுத்துவதாக பல ஊடகங்களில் நாளாந்தம் சுட்டிக்காட்டி வருகின்ற போதிலும் அதுகுறித்து அக்கறை செலுத்தாது இவ்வாறு தங்களுடைய பிள்ளைகளை அனுப்புவது மிகவும் கவலைக்குரிய விடயம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைமைத்துவம் ஏற்க வேண்டிய இளைஞர் யுவதிகள் இவ்வாறான விருந்துபசாரங்களில் கலந்து கொண்டு போதை வஸத்துக்கு அடிமையாவதனை தடுப்பதற்கு பெற்றோர்கள் கூடிய அக்கறை செலுத்துவது இன்றிமையாதது என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
குறித்த விருந்துபராசம் இரவு 12.மணிவரை நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அட்டன் பகுதியில் இவ்வாறான விருந்துபசாரம் ஒன்றில் போதைவஸ்து பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டது முதல்முறையானதும் என குறிப்பிடத்தக்கது.