ஹெரோயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வியாழக்கிழமை எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை இந்நாட்டுக்குக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை தொடர்பாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக, விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி 260 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட கஞ்சி சாகுஃத்னாஸ் என்ற குற்றவாளிக்கு எதிராக 537/2019 எனும் வழக்கு எண்ணிலும், அதே வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 404 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட டீன் அல்லா என்ற குற்றவாளிக்கும் 540/2019 என்ற எண்ணிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி 367 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மொஹம்மட் அஸ்லாம் என்பவருக்கு 557/2019 என்ற இலக்கத்திலும், அதே வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி 2 கிலோ 766 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மலிக் அத்னா அஃப்சல் சைரா கான் எனும் குற்றவாளிக்கும் 539/ 2019 என்ற இலக்கத்திலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையிலேயே, வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.