அரசாங்கத்தின் பாரிய நடைமுறையே இன்றைய தினம் பட்டாதாரிகளுக்கு வழங்கப்படும் தொழில் நியமனங்களாகும். இருந்த போதிலும் நாம் குறுகிய வட்டத்தினுள் சுழலும் மனிதர்களாகவே செயற்படுகின்றோம்;. பொருளாதாரத்தை விசாலமாக்க வேண்டியது தற்கால அவசியம்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (01) அம்பாறை ஹாடி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
இலக்குகளுக்கு அப்பால் நமது செயற்றிறன்களே வலுவான பொருளாதர முன்னேற்றத்தை பிரசவிக்கும். இன்றைய தினம் அரசாங்கத்தினால் ஆயிரக்கனக்கானோருக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றினால் அரசாங்கம் பல மடங்கு தொகைப் பணங்களை செலவு செய்ய வேண்டியுள்ளது.
அவ்வாறு செய்யப்படும் செலவுகளுக்கு பிரதிபலிப்பாக ஆசியாவிலேயே அதி சிறந்த நாடாக வரலாறு கண்டுவரும் ஜப்பான் போன்று எமது நாடும் தொழில்சார் முன்னேற்றங்களை கான வேண்டும். ஒரு நியமனம் என்பது சாதாரன விடயமல்ல தொழிலின் போது சம்பளம், பின்னர் ஓய்வூதியம், இறந்த பின்னரும் இழப்பீட்டுத் தொகைகள், ஏதேனும் விபத்துக்களின் போது காப்புறுதி இப்படி எத்தனையோ விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இவை அத்தனையும் பொருளாதார ரீதியிலான வெளிப்பாடுகளையே தாங்கி நிற்கின்றன. இருந்த போதிலும் இக் காலகட்டத்தில் அரசாங்கத்தினால் இவ்வாறான நியமனங்களும், தொழில் வாய்ப்புக்களும் வழங்கி வைக்கப்படுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். – என்றார்.
