ஆசிரியர் ஆலோசகர்கள் கடந்த 05மாதகாலமாக மேற்கொண்டுவந்த தொழிற்சங்கப்போராட்டம் நிறைவுக்குவந்தது என அகிலஇலங்கை ஆசிரியஆலோசகர் தொழிற்சங்கச்செயலாளர் எஸ்.ஜி.எம்.சமரக்கோன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான எழுத்துமூல அறிவித்தலை கல்வியமைச்சர் தொடக்கம் வலயக்கல்விஅதிகாரிகள் வரை அனுப்பியுள்ளார். அதன்படி கடந்த 15ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை முடிவுக்கொண்டுவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையினை ஸ்தாபிப்பிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 21.2.2019 ஆம் திகதியிலிருந்து சுமாh 4000ஆசிரியஆலோசகர்கள் தொடர்ச்சியாக தொழிற்சங்கப்போராட்டத்தை முன்னெடுத்துவந்திருந்தனர்.
அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தம்காரணமாக கடந்தவாரம் இதுதொடர்பாக தெரிவுக்குழு முன்னிலையில் குறித்தசேவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற மனித வள விசேடதுறைகளுக்கான தெரிவுக்குழு முன்னிலையில் இச்சேவை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற இவ்வமர்வில் இப்புதியசேவை தொடர்பாக அலசிஆராய்ந்து அதனை ஏற்றுக்கொள்வதென தீர்மானமாகியது.
அதன்படி ஆகஸ்ட் 16ஆம் திகதி பொதுச்சேவை ஆணைக்குழு இச்சேவையினை பரிபூரணமாக ஸ்தாபித்து நிறைவுசெய்து தருவதாக தெரிவுக்குழுவில் உறுதியளித்துள்ளது.
அதனையடுத்து இதுவரைகாலமும் அதாவது கடந்த 5மாதங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த தொழிற்சங்கப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விசேட துறைசார் தெரிவுக்குழவில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது எதிர்வரும் ஆகஸ்ட் பதினாறாம் திகதி ஆசிரியர் ஆலோசகர் சேவையினை ஸ்தாபித்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்தல் என்ற உறுதியின் அடிப்படையில் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது.
நன்றியுடன் கூடிய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும்; தாம் முன்னெடுத்ததொழிற்சங்க நடவடிக்கைகளை 15.07.2019 தொடக்கம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எமது சங்கம் தீர்மானித்துள்ளோம் என அகிலஇலங்கை ஆசிரியஆலோசகர் தொழிற்சங்க தமிழ்மொழிக்கான செயலாளர் செல்லையா பிரபாகரன்(பதுளை வலயம்) தெரிவித்தார்.
இப் போராட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் சொன்னார்.