அஸீம் கிலாப்தீன்-
ஓமானுக்கான இலங்கை தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு
ஓமானுக்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல். அமீர் அஜ்வத், கடந்த புதன்கிழமை (10) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
ஓமான் தலைநகர் மஸ்கடிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் இடம்பெற்ற சிறிய நிகழ்வொன்றின் போதே இவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தல், தொழில் வாய்ப்பு, வர்த்தக, முதலீடுகள் மற்றும் சுற்றுலா மேம்படுத்தல் ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
இவர், 1998ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சையின் ஊடாக இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்துகொண்டார். சிங்கப்பூர் மற்றும் பூரூனே ஆகியவற்றுக்கான பதில் இலங்கை உயர் ஸ்தானிகராகவும், இந்தியாவின் சென்னைக்கான பிரதி உயர் ஸ்தானிகராகவும் அமீர் அஜ்வத் கடமையாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவின் றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயம், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நர்ட்டுக்கான இலங்கையின் நிரந்தர அலுவலகம் ஆகியவற்றிலும் இவர் கடமையாற்றியுள்ளார். அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் விவகாரம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.
பேருவளை ஜாமியா நளீமியாவின் பழைய மாவணரான இவர், பேராதனை பல்கலைக்கழக கலைப் பட்டதாரியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியுமாவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமானியான இவர், 1997ஆம் ஆண்டு சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.